வெள்ளி, 8 அக்டோபர், 2021

காதல் காற்று

 காதல் காற்று

www.sinegithan.in





குறிப்பு: இந்தக் கட்டுரையை பொறுமையுடன் முழுவதும் வாசிக்கும்படி வேண்டுகின்றேன். பாதியில் நிறுத்திவிட்டால், எனது முழு கருத்தும் உங்களுக்குப் புரியாமல், ஒரு பக்கமாக நீங்கள் சிந்திக்கும் வாய்ப்பு உண்டு.


வாலிபப் பருவத்தில் அடியெடுத்து வைக்கின்ற சகோதர, சகோதரர்களாகிய உங்கள் மேல் காதல் காற்று வீசுவது தற்போது வழக்கமாகிப்போனது. காதலியின் பெயரை நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதிலும், காதலிக்காவிட்டால் மனது வெறுமையாயிருக்குமே என பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் காலம் இது. காதலிப்பது தவறா? நான் வாழப்போகும் பெண்னை அல்லது வாலிபனை நான் ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? என்ற பல தரப்பட்ட கேள்விகள் வாலிபப் பருவத்தில் உங்களுக்கு உண்டாகலாம். வாலிப வயதினை அடையும்போது எதிர்பாலரின் மேலான ஈர்ப்பு தவறல்ல, அந்த உணர்வு இறைவனின் படைப்பு; ஆனால், அதனை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளப் பழகவேண்டும். அழகினாலோ, அணிந்துவரும் ஆடைகளினாலோ நீ ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது. அவள் அல்லது அவன் யார்? என்பதை அழகிலோ, ஆடைகளிலோ அல்லது ஒருசில நடக்கைகளினாலோ, வார்த்தைகளினாலோ மாத்திரம் நீ அறிந்துகொள்ளமுடியாது.


தெரிந்தெடுப்பது எப்படி?




வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுப்பது எப்படி? என்ற கேள்வியினை மூன்று பிரிவுகளாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1.நாமாகத் தெரிந்தெடுப்பது 2. பெற்றோர்கள் தெரிந்தெடுப்பது 3. தேவன் தெரிந்தெடுப்பது. இம்மூவரின் துணையும் இன்றியமையாதது.

வாலிபப் பருவத்தை அடைந்த சகோதர, சகோதரிகளுக்குத் தங்கள் துணையைத் தெரிந்தெடுப்பது எப்படி என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தை விட்டுப் பிரியாதது. திருமண வயதை அடைந்ததும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கான துணையைத் தேடத் தொடங்கினாலும், இவர்களின் மனது யாராயிருக்குமோ, யாராயிருக்குமோ எனத் துடித்துக்கொண்டேதானிருக்கும். யாரையாவது பார்க்கும்போது இவனாக அல்லது இவளாக இருக்குமோ என்ற விடையறியாத கேள்விகளுக்குப் பதில் பெறத் தெரியாது திணறிக்கொண்டிருக்கும் நெஞ்சம். யாரையாவது கண்டவுடன் அவனது வெளித்தோற்றத்தைப் பார்த்து, பேச்சினை ரசித்து ரசிகையாகி ரசிகனாகி துணையாக்கத் துடிப்பது வெளிப்புற உணர்வுகளின் அடிப்படையினாலானதாகவே இருக்கும்.

தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியாத சவுலை ராஜ பதவியிலிருந்து தேவன் தள்ளிய பின்பு, தனது ஜனத்தின் மேல் ராஜாவாகும்படி தாவீதைத் தெரிந்துகொண்டார். ஆனால், அதனை சாமுவேலினிடத்தில் அவர் அறிவிக்கவில்லை. தேவன் சாமுவேலை நோக்கி, 'நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன்' (1சாமு 16:1) என்றே சொல்லுகின்றார்; ஈசாயின் குமாரரில் யாரை ராஜாவாக அபிஷேகிக்கவேண்டும் என்று சாமுவேலினிடத்தில் சொல்லவில்லை. தான் தெரிந்தெடுத்த மனிதனையே சாமுவேலும் தெரிந்தெடுக்கின்றானா என சாமுவேலை தேவன் சோதித்தார்; ஆனால், அந்த சோதனையில் சாமுவேல் தோற்றுவிட்டான். தேவன் தெரிந்துகொண்ட மனிதனை சாமுவேல் தெரிந்துகொள்ளாமல், தனது கண்களுக்கு இதமானவனை, பெலமானவனை, தகுதியாகத் தெரிந்தவனை ராஜாவாக அபிசேஷம் பண்ண எத்தனிக்கின்றான். 'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல' (ஏசா 55:8) என்ற தேவ வார்த்தை சாமுவேலின் வாழ்க்கையில் எத்தனை உண்மையாயிற்து. தேவன் சவுலை ராஜாவாகத் தெரிந்தெடுத்தபோது, 'இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்' (1சாமு 9:2) என்று சவுலின் தகுதியைக் குறித்து வேதம் சொல்லுகின்றது. இதனைக் கண்டிருந்த சாமுவேல், சவுலைப்போல உயரமான வாட்டசாட்டமான மனிதனையே ராஜாவாக கர்த்தர் தெரிந்தெடுப்பார் என்று மனதிலே எண்ணங்கொண்டிருந்தான்; ஆனால், தேவனின் தெரிந்தெடுப்போ வித்தியாசமாயிருந்தது; உடலைப் பார்த்து அல்ல உள்ளத்தைப் பார்த்து தெரிந்தெடுப்பவர் நமது தேவன்.

ஈசாயின் வீட்டில் சாமுவேல் திகைத்து நிற்கின்றான், யாரை அபிஷேகம் செய்யவேண்டும் என குழம்பி நிற்கின்றான். சாமுவேல் தெரிந்துகொண்டவனை கர்த்தர் புறக்கணிக்கின்றார். 'கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார் (1சாமு 16:7) என்று தான் வேதம் சொல்லுகின்றது.

தேவன் புறக்கணித்த மனிதனை ராஜாவாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையிலும் திருமண நேரங்களில் இப்படியே நடக்கின்றது. தேவன் தெரிந்தெடுத்ததை நாம் தெரிந்தெடுக்கத் தவறிவிடுகின்றோம். நம்முடைய மாம்சமும் மனதும் இச்சித்து விரும்புபவனை(ளை) தேவன் வெறுத்துத் தள்ளி உனக்குரியவ(ன்) அல்ல என்று சொல்லும்போது, தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியத் தடுமாறுகின்றோம். தேவன் புறக்கணித்துத் தள்ளியவனை(ள) புறக்கணியாமல், தேவனைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றோம். தேவன் தெரிந்தெடுத்தவனை(ள) நாம் தெரிந்தெடுக்கவேண்டும்.

மனிதனின் இருதயத்தைக் காணும் சக்தி உலகத்தில் எவருக்கும் இல்லை. அழகையும், ஆடைகளையும் கண்டு மசிந்து காதலில் விழும் பலரால் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சியாகத் தொடர இயலவில்லை; காரணம், இதயத்தை அறியாமல் அவர்கள் இடறிவிழுந்ததே. எந்த ஒரு வாலிபனும், வாலிபப் பெண்ணும் தன்னிடத்திலுள்ள கெட்ட பழக்க வழக்கங்களையும், தோல்விகளையும், பெலவீனங்களையும் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை; காதலிக்கும்போது அவைகள் கண்ணில் படுவதும் இல்லை. 'தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவர்' (1இராஜா 8:40) என்று வேதத்தில் வாசிக்கின்றோம். எனவே அவரது சிந்தையை அறிந்துகொள்ள அவரது பாதத்தில் அமர்ந்திருப்பதே சிறந்தது.

ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். (ஆதி 26:34,35) பெற்றோரின் விருப்பம் இல்லாமல், தானாகவே தெரிந்தெடுத்து திருமணம் செய்துகொண்டதால், ஏசாவின் மனைவிகள் பெற்றோருக்கு மனநோவாயிருந்தார்கள்.

காதலியின் நினைவினால் தன்னை மறந்து படிப்பினை இழந்து அவனையே நினைத்து வாழ்க்கையினை அழித்து எப்படி வாழ்வது? என்று கேள்விக்குறியோடு நீ உனது எதிர்காலத்தில் நின்றுவிடக்கூடாது. எந்த வயதில் எதைச் செய்யவேண்டும் என்று சரியாகப் பகுத்து ஆராய்ந்து செயல்படாவிட்டால் உனது வாழ்க்கை சிதைந்துபோய்விடும். படிக்கின்ற வயதில் காதலித்து படிப்பின் மேல் கவனம் செலுத்த இயலாமல் போவதினால்,எதிர்காலத்தில் உண்டாகப்போகும் நஷ்டத்தை நீ ஈடுகட்ட முடியாது. அப்பொழுது நீ எத்தனை கண்ணீர் வடித்தாலும் நஷ்டத்தை நிவிர்த்தி செய்யும் சந்தர்ப்பும் உனக்குக் கிடைக்காது. பெண் முழு உலகமல்ல, நீ வாழும உலகத்தில் அவள் ஒருத்தி. காதலிக்கும் வாலிபர்களில் பலர் தங்களுக்கு வரும் ஆலோசனைகளின் கருத்தை அறிந்துகொள்ளக் கூட முயற்சிப்பது இல்லை. எங்கே நாம் காதலிப்பதை இவர் வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே அவர்கள் பேச்சு காணப்படும். அதிகமாய்ப் போனால் ஆலோசனை கொடுப்பவர்களைக் கண்டு விலகிக்கொள்ளுவார்கள். காதலிக்கும் நண்பர்களும், காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களும் உனக்கிருந்தால் நீ கவனமாயிருக்கவேண்டும்; அவர்களுடைய செயல் உன்னையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களை, குடும்பங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். உனக்கும், அவளுக்கும் இடையில் தரகர்களைப் போல செயல்படுவது, நல்லதைச் செய்வது போல தோன்றலாம். யாரையோ நம்பி ஆழம் தெரியாமல் காலை விடுவது நல்லதன்று; நண்பர்களின் தூண்டுதலினால் நீ தொடங்கினாலும், தூண்டிலில் மாட்டிக்கொள்ளப்போவது நீதான்; எச்சரிக்கை.

பெற்றோர்கள் தெரிந்தெடுக்கும்போது, தேவ சித்தத்திற்கு விரோதமாக, தேவன் குறிக்காததைத் தெரிந்தெடுத்துவிடுவார்களோ என்ற ஐயம், நீ கிறிஸ்துவுக்குள் ஸ்திரமாய் இருப்பாய் என்றால் உண்டாகவேண்டிய அவசியமில்லை. யோனாவை நோக்கி தேவன் : நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் (யோனா 1:2); ஆனால், யோனாவுக்கோ நினிவேக்குப் போக மனதில்லை, அவன் தர்சீசுக்குப் போக கப்பலேறினான் ஆனாலும், தேவன் அவனை தர்சீசுக்கு போய்ச் சேரவிடவில்லை; தனது திட்டத்திற்கு நேராக அவனைத் திருப்பினார். அப்படியே, பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படியாக கூலிக்காகச் சென்றபோதிலும், தேவன் பிலேயாமின் மேல் ஆளுகை செய்து அவனை அவனது இஷ்டத்திற்கு விடாமல்; தனது ஜனத்தை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தையே நிறைவேற்றினார். பவுல் கப்பலில் கைதியாய் கொண்டுபோகப்படும்போது, யூரோக்கிலிதோன் என்றும் காற்றினால் கப்பலைக் கர்த்தர் நொறுக்கி பவுலை தேவனுடைய ஊழியக்காரன் என நிரூபித்தார். நம்முடைய வாழ்க்கையிலும், தேவ சித்தத்திற்கு விரோhமாக நாமும் சென்றுவிடாதபடி, மற்றவர்களும் நம்மை நடத்திவிடாதபடி கர்த்தர் நிச்சயம் காப்பார் கலங்கவேண்டாம்.


விருப்பம்




காதல் என்ற வார்த்தையினை உபயோகிப்பதைக் காட்டிலும் 'விருப்பம்' (Desire) என்ற வார்த்தையே அதற்குப் பொருத்தமானது. கடையில் காணும் எந்த ஒரு பொருளின் மேலும் விருப்பம் கொள்வது தவறல்ல. ஆனால், அதனை வாங்கும் தகுதி நமக்கு இல்லாதிருக்கும்போது, அதனையே நினைத்து நினைத்து ஏங்குவது தவறல்லவா? அதிக விலையுடைய ஒரு கைக்கடிகாரத்தைக் கடையில் நீங்கள் காணுகின்றீர்கள், அது உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை உண்டாகின்றது, வாங்கவேண்டும் என்ற விருப்பமும் உங்கள் மனதில் ஏற்படுகின்றது; ஆனால், கையிலோ பணம் இல்லை; அதற்காக அதனைத் திருடிவிடமுடியுமா? அப்படித் திருடினால் அது சரியாகுமா? அப்படித் திருடி அகப்பட்டுக்கொண்டால் அதற்குரிய தண்டணையை அனுபவிக்கவேண்டியதிருக்கும் அல்லவா. அப்படித்தான் இன்று பல காதலர்கள் மாட்டிக்கொண்டார்கள். தன்னுடையதல்லாத வாலிபனின் மேல் அல்லது வாலிப சகோதரியின் மேல் ஆசை வைத்து அவர்களைத்தான் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளுவேன் என அடம்பிடித்து, இறைவன் வேறொருவனுக்காக நியமித்ததை அறியாது கண்களினால் இச்சித்து மாம்சத்தின்படி முடிவெடுத்து, ஆசை வைத்து வசப்படுத்திக்கொண்டு, திருமண வாழ்க்கைக்குப் பின்னர் திருடியதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். வழியில் நிற்கும் யாரோ ஒருவருடைய அழகான காரை பார்ப்பது தவறல்ல ஆனால், அந்த கார் என்னுடையது என்று உரிமையாளரிடம் பிடிவாதம் பிடித்தால், வாதிட்டால் அது தவறுதானே. கல்லூரியில், வெளியில் காணும் வாலிப சகோதரிகளை காண்பதோடு நிறுத்தாமல், அவர்களை ருசிக்கும் மனதுடன் செயல்படுவது தவறுதானே. எல்லாவற்றிற்கும் சரியான வழி ஒன்று உண்டல்லவா.


கீழ்க்கண்ட காரியங்களில் ஏதாவது ஒன்றினால் எதிர்பாலரின் மேல் விருப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.


1. வயது வரும்போது உடல் ரீதியாக உண்டாகும் மாற்றங்களினால் எதிர்பாலரின் மேல் ஈர்ப்பு ஏற்படும். 

2. உடல் அழகையோ, உடை அழகையோ காணும்போது விருப்பம் உண்டாகலாம். 

3. அன்பாய் பேசுகிறவர்களைக் காணும்போது விருப்பம் உண்டாகலாம்.

4. அவர்களது பழக்கவழக்கங்களைக் கண்டு விருப்பம் உண்டாகலாம். 

5. காதலிக்கும் மற்றவர்களைக் கண்டு உனது மனதிலும் காதலிக்கும் விருப்பம் ஏற்படலாம்

6. சினிமாவைச் சார்ந்திருப்பதும் காதலைத் தூண்டுவதற்கு ஒரு காரணம் என்பதை மறக்கவேண்டாம். 

7. தேவைக்கு அதிகமாக எதிர்பாலருடன் பேசுவதால் விருப்பம் உண்டாகலாம்.


ஆனால், மேற்கண்டவைகளைக் கொண்டு உனது துணையை உடனே நீ நிர்ணயித்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

விருப்பம் வந்தவுடன் வேலியைத் தாண்டிவிடக்கூடாது, இரண்டு பேரும் பெற்றோர் என்ற வேலிக்குள் இருக்கிறீர்கள் என்பதனை மறக்கவேண்டாம். பெற்றோரின் ஒப்புதல் கிடைத்தாலும், காதலர்களாக வாழத் துணியவேண்டாம், நீங்கள் ஒப்புதல் பெற்ற காதலர்கள் என்பது உலகத்திற்குத் தெரியாதே. உலகத்தின் ஒப்புதல் திருமணத்தன்றுதான் கிடைக்கும்; அதுவரை காதலர்களாக வாழ்ந்து மற்றோரின் மனங்களை கறைப்படுத்தவேண்டாம்; காத்திருப்பது உச்சிதமானது. தொலைபேசி உரையாடல்கள், தொட்டுப் பேசும் சூழ்நிலைகள், பரிசளிக்கும் சந்தர்ப்பங்கள் போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்; இவைகள் அனைத்தும் எல்லையைத் தாண்டும் எட்டுக்கள்.


முதல் தகவல் அறிக்கை 




ஒரு வாலிப சகோதரி அல்லது சகோதரனின் மேல் விருப்பம் உண்டானால், முதலில் அதனை பெற்றோரிடத்தில் தெரிவிக்கவேண்டும். உன்னைப் பெற்ற பெற்றோர், உன்னை வளர்த்த பெற்றோர் உனது வாழ்க்கைக்கு நல்லவைகளையே நினைப்பவர்கள் என்ற நம்பிக்கை உனக்கு மனதில் உண்டாகவேண்டும். 'பொல்லாதவர்களாகிய நீங்கள் (பெற்றோர்கள்) உங்கள் (அவர்கள்) பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது' (லூக்கா 11:13) என பெற்றோரின் மேலான நம்பிக்கையை இயேசு எத்தனையாய் உறுதிப்படுத்துகின்றார். மற்றவர்களைப் பகைப்பது போல பெற்றவர்களையும் பகைத்து அவர்களை எதிரியாகப் பார்க்கும் போக்கினின்று வாலிபர்கள் விடுபடவேண்டும். அவர்கள் ஒருபோதும் உனக்கு எதிரானவர்கள் அல்ல. சிம்சோன் ஒரு பெண்னை விரும்பியபோது அவன் முதலில் வந்து அந்த விருப்பத்தை தனது பெற்றோரிடத்தில் தெரிவித்தான் (நியாயாதிபதிகள் 14:2); இது சரியான வழி.

ஆனால், யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாளை சீகேம் கண்டு அவளைக் கொண்டுபோய் அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தி (ஆதியாகமம் 34:2), பின்னர் தன் தகப்பனிடத்தில் 'இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும்' (ஆதியாகமம் 34:40 என்று சொல்லுகின்றான். இதுதான் இன்றைய காதல் உலகின் நிலை. ஒரு பெண்ணின் மேல் விருப்பம் ஏற்படும்போது எதனை முதலில் செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற காரியங்களிலேயே இன்றைய இளைய தலைமுறை திணறுகிறது, தவறுகிறது. பெண்ணின் மேல் விருப்பம் ஏற்பட்டதும், அவளுடன் பேசி நேரம் செலவழித்து, உல்லாசமாய்ச் சுற்றி, இன்பமாய் நாட்களைப் போக்கி, எல்லைகளையும் மீறி திருமணத்திற்கு பின்னர் அனுபவிக்கவேண்டியவைகளுக்காகக் காத்திராமல் உடலுறவு கொண்டு, இத்தனையையும் பெற்றோர்க்குத் தெரியாமல் செய்துவிட்டு, பின்னர் அதனை அறிவிப்பது எத்தனை தவறானது. திருமணத்திற்கு முன் உன்னை அனுபவிக்க நினைப்பவன் திருடன். ஜாமத்தில் வந்து காமத்தைத் தின்றுவிட்டு மோகத்தில் போய்விடுவான். இன்பத்தில் லயித்திருக்கும்போது இதெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லை. யாரோ ஒரு வாலிபனுக்கு உடலைக் கொடுத்துவிட்டு பின்னர் அவனது அன்பிற்காக வாலிப சகோதரியே நீ ஏங்கி அலையாதே. காமத்தை நிறைவேற்றிய உடன் சில காதலர்கள் காணாமல் போய்விடுவதுண்டு; அவன் வேறெங்கும் போயிருக்கமாட்டான்; உன்னைப் போல ஏமாறும் வேறு பெண் அகப்படமாட்டாளா என சுற்றித் திரிந்துகொண்டிருப்பான். அவன் உன்னைக் காதலித்தது அந்தத் தேவைக்குத்தான் என்பது அப்போது உனக்குப் புரியும்; என்றாலும், கற்பை இழந்தது இழந்ததுதானே; கருப்பை இருக்கும் ஆனால் கற்பு இருக்காது. வாலிபப் பெண்னே வாலிபனிடம் நீ நெருங்கிப் பழகினால், உனது கற்பு நொறுங்கிப்போகும் என்பதை மறந்துவிடாதே. செய்வதெல்லாவற்றையும் மறைமுகமாகச் செய்துவிட்டு, பின்னர் பெற்றோரின் அங்கீகாரத்தைத் தேடுவது முறையாகுமா? பெற்றோர்கள் உங்கள் இன்பத்திற்கு எதிரிகள் அல்ல, அவர்கள் உங்களை இன்பமாக வைக்க விரும்புபவர்களே.

இந்நிலைக்கு வந்துவிட்ட வாலிபர்கள் பெற்றோரை தங்கள் வழிக்குள் எப்படியாவது இழுத்து அவர்களைச் சம்மதிக்கப்பண்ணவேண்டும் என்றே செயல்படுவார்கள். இப்படியானால், பெற்றோரின் விருப்பத்திற்கு இடமில்லையே! அவர்கள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது? அவளைத்தான் திருமணம் முடிப்பேன் என்று தீர்க்கமான முடிவினை எடுத்துவிட்டு பெற்றோரிடம் செல்வது தவறான ஒன்று; இது உனது திருமணத்திற்கு பெற்றோருக்கே அழைப்பிதல் கொடுக்கும் நிலை. இச்சூழ்நிலையில், பெற்றோர் மறுத்தாலோ அல்லது எதிராகப் பேசினாலோ என்னவாகும்? அவர்களைத்தான் வெறுக்கத் தோன்றும் உன் மனம். பெற்றோரது பதிலைச் சகித்துக்கொள்ளாமல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நீங்களே உங்களைத் தள்ளிவிடுவீர்கள். பெற்றேர்ருக்கு இத்தகைய செயல் எத்தகைய மனமடிவை உண்டாக்கும். கட்டாயமாக அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று பெற்றோரின் ஆசியைத் தூசியைப் போல உதறிவிடும் வாலிபர்களும் ஏராளம்.

பெற்றோரிடம் ஒரு பெண்ணைக் குறித்ததான உனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது, பெற்றோரின் பதிலுக்கேற்ப உனது முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையுடன் நீ காணப்படவேண்டும். அவர்கள் சாதகமாகப் பேசினாலோ அல்லது பாதகமாகப் பேசினாலோ அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உனக்கு வேண்டும்; இதுவே பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

ஒருவேளை நீ தெரிந்தெடுத்த, விரும்பிய பெண்ணை மணமுடிக்க உனது பெற்றோரின் மனது சம்மதிக்குமென்றால், அது திருமணத்திற்கான சம்மதம், காதலுக்காக அல்ல. பெற்றோர் ஒத்துக்கொண்டார்கள் என்பதற்காக திருமணம் முடிக்கப்போகும் நாள் வரை காதலர்களாக வாழலாம், இஷ்டம் போல சுற்றித் திரியலாம், விரும்பியவைகளை இணைந்து செய்யலாம், பெற்றோரின் ஒப்புதல் கிடைத்துவிட்டது இனி யார் என்ன நினைத்தால் எனக்கென்ன எண எண்ணி உங்களை நீங்களே மண்ணில் புதைத்துக்கொள்ளாதிருங்கள். பெற்றோர்களின் ஒப்புதல் திருமணத்திற்கானது, காதலுக்கானது அல்ல. பெற்றோர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு மற்றோர்க்கு முன் காதலர்களாக வாழ்ந்தால், அது 'அங்கீகரிக்கப்பட்ட காதல்' ஆனால் 'அசிங்கப்படுத்தப்பட்ட வாழ்தல்'. 'பெற்றோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட காதல்' என அதற்கு தனி மதிப்பு கொடுத்து அகந்தை கொள்ளாதிருங்கள். பெற்றோர்கள் ஒத்துக்கொண்டது நீங்கள் இருவரும் திருமணம் செய்ய நாங்கள் சம்மதிக்கிறோம் என்பதே, மாறாக திருமணம் வரை எப்படி வேண்டுமென்றாலும் காதலர்களாக வாழ்ந்துகொள்ளுங்கள் என்பதற்கு அல்ல. திருமணம் செய்யும் வரை காதலியுங்கள் என்றல்ல காத்திருங்கள் என்பதே பெற்றோர்களின் ஒப்புதல்.

'பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாதிருப்பாயாக' (உபா 5:21) என்கிறது வேதம். மற்றொருவருடையதை விரும்புவதே இச்சை. மனைவி மற்றொருவனுடையவளானால், மகளும் பெற்றவனுடையவளே. உரிய முறையில் அவளது பெற்றோரிடத்தில் கேட்டு, அவர்களும் இசைந்துவந்தால் திருமணம்வரை காத்திருந்து (காதலித்து அல்ல) மணமுடிக்கலாம், இது இச்சை அல்ல தெரிந்தெடுத்தல், கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால், அவள்தான் வேண்டும் என்றால் அது இச்சை. யாரோ ஒருவருடைய மகளை அல்லது மகனை எப்படியாவது என்னுடையவளாக்கிக்கொள்ளவேண்டும் என்ற மாறாத நோக்கம் இச்சைதானே. உடiலைப் பார்த்து, அழகைப் பார்த்து இச்சிப்பது மாத்திரமல்ல பெற்றோரின் அனுமதி இன்றி தான் பார்க்கும் ஒருவள் தனக்கு வேண்டும் என்ற வேட்கை. தனக்குப் பிடித்துவிட்ட அவள் வேண்டும் என்ற விருப்பத்தை, முறைப்படி கொண்டு செல்லாமல், விருப்பத்தை இச்சையாக்கி, இச்சையை காதலாக்கிவிடுகிறார்கள். அழகை அல்ல அவளையே இச்சிப்பது இச்சைதானே. 'ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று' (மத் 5:28) என்ற வசனத்தின்படி, எந்த ஒரு வாலிபப் பெண்ணையும் இச்சித்தாலே, அவளோடு விபச்சாரம் செய்துவிட்டாய் என்பதே வேதத்தின், தேவ குமாரனாகிய இயேசுவின் போதனை. அவளது உடலோடு உனது கண் உறவு கொண்டுவிட்டதால், அது விபச்சாரம்; எனினும், உடலோடு உடவு கொள்ளும் வரை அவளை விபச்சாரி எனக் கூறலாகாது. அவளல்ல, நீதானே உனது கண்களினால் தவறு செய்கிறாய், எனவே அத்தகைய விபச்சார கண் பார்வைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வாழ்வது சிறந்தது. எனவே, விருப்பத்தை இச்சையாக்கியபோதே விபச்சாரம் நடந்துவிட்டது. அவளையோ, அழகையோ இச்சித்து காதலித்து திருமணம் செய்தால், இருதயத்தில் விபச்சாரம் செய்து விவாகம் செய்கிறீர்கள் என்பதனை மறந்துவிடவேண்டாம். கடினமான வாக்கியம் இது என்றாலும், கண்ணியமான போதனைதான், ஒத்துக்கொள்ளக் கஷ்டமாக இருக்கிறதே என ஓலமிடவேண்டாம்.

அவனுடன் உடலுறவு கொண்டுவிட்டேன், எனவே வேறொருவனைத் திருமணம் செய்ய மனமில்லை எனச் சொல்லும் வாலிப சகோதரிகள் உண்டு. அவனுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் எனச் சொல்வதைவிட விபச்சாரம் செய்துவிட்டேன் என்ற வார்த்தைதான் சரியானது. வேலியைத் தாண்டினாலே விபச்சாரம்தான்; விவாகத்திற்கு முன்னான உறவை பின்னர் என்ன என்று சொல்லுவது.


உடலுறவு



திருமணத்திற்கு முன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது? நான் அவளைத்தானே திருணம் செய்துகொள்ளப்போகின்றேன், இதில் எந்த மாற்றமும் இல்லையே; அப்படியிருக்க அவளோடு திருமணத்திற்கு முன் நான் உடல் உறவு வைத்துக்கொள்ளவதில் என்ன தவறு? ஒருத்தியோடு உறவு வைத்து அவளை ஏமாற்றி மற்றவளைத் திருமணம் செய்தால்தானே தவறு என்று மனதிலேயே கேள்விகளோடு தவறு செய்பவர்கள் உண்டு. அப்படி திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொண்டால், நீ காதலுக்கு அல்ல காமத்திற்கே முதலிடம் கொடுப்பவன் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். காமப் பசி வயிற்றைப் பிசையும்போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுவான். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள் அல்லது அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். நீ காதலித்தால் உனது காதலியை மட்டும் அல்ல அவளது கற்பையும் திருமணம் வரை பாதுகாக்கும் பொறுப்பு உனக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

2சாமுவேல் 13ம் அதிகாரத்தில் காமப் பசி கொண்ட அம்னோன் அழகாயிருந்த தாமாரை அடையவேண்டும் என்று எண்ணினான். அதனால் அவன் தனது தகப்பனிடத்தில் ஒரு நாடகமே நடத்தினான். தகப்பனாகிய தாவீதும் அம்னோனின் நாடகத்தில் ஏமாந்துவிட்டான். அவன் ஆசைவைத்த தாமாரை அவன் அடைந்த பின்பு, அவளுடன் உடலுறவு கொண்ட பின்பு, அவளை அவன் தள்ளிவிட்டான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான் (2சாமுவேல் 13:15) என்று வேதத்தில் காண்கின்றோம். கற்பைத் தின்றுவிட்டு உடலை வீசிவிடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்துவிடாதிருங்கள்.

திருமணத்திற்கு முன் தவறான உடலுறவினால் கரு உண்டாகிவிட்டால் என்ன செய்வது? கலைத்துவிடவேண்டியதுதானே என்பதுதான் பலரது கருத்தாக இருக்கும். கருவும் ஒரு உயிர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். கருக்கலைப்பு ஒரு கொலை என்பதை மறந்துவிடக்கூடாது. கருவைக் கலைத்துவிட்டு கனவிலும், நினைவிலும் துன்பப்படுவோர் அநேகர். உனது தவறான உறவினை மறைக்க ஒரு உயிரைப் பலி கொடுப்பது நியாயமாகுமா? அந்த நரபலியினை இறைவன் அங்கீகரிப்பாரா? அதற்குப் பதில் செய்யப்படாமல் போகுமா? தவற்றிற்கு உடனடி நிவாரணம் தேடும்போது இவைகள் நினைவில் வருவதில்லை. ஒரு தவற்றை மறைக்க மற்றொரு தவறு செய்வதுதானே மனித இயல்பு. நான் நம்பிய வாலிபன் என்னோடு உடலுறவு கொண்டுவிட்டு ஓடிவிட்டான். நான் கருவுடன் இருக்கிறேன் இப்போது என்ன செய்வது? அதனை எனது பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் எப்படி மறைப்பது என்ற கேள்விக்கு கருவைக் கலைத்துவிடு என்பது சாதகமானப் பதிலாக இருந்தாலும், அதினால் உண்டாகும் பாதகத்திற்கும், சாபத்திற்கும் அவள் தப்ப இயலாது. செய்த தவற்றினை இறைவன் மன்னித்துவிடலாம், அதற்காக அந்த சிசுவின் கொலையை அவர் அங்கீகரிப்பாரோ? நிச்சயம் மாட்டார். இறைவன் தீமைக்கு விரோதமானவர். உனது தவற்றிற்காக அடுத்தவனைக் கொன்றுவிடு என்று இறைவன் ஒருபோதும் ஆலோசனை சொல்லுவதில்லை. அந்த சிசு நிச்சயம் வளர்க்கப்படவேண்டும்; அதினிமித்தம் உண்டாகும் பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு காணப்படவேண்டுமே ஒழிய அதனைக் கொன்றுவிடுவது ஒருபோதும் தீர்வாகாது.

வேதத்தில் காணப்படும் ஒரு சம்பவம் நல்லதோர் உதாரணம். உரியாவின் மனைவியாகிய பச்சேபாள் குளித்துக்கொண்டிருக்கும்போது, தாவீது தனது மாளிகையின் மேலிருந்து அவளைப் பார்த்து அவள் மேல் மோகம் கொண்டான். அவன் அரசனாக இருந்தபடியினால் அதனை நிறைவேற்றுவது அவனுக்கு எளிதாக இருந்தது. பச்சேபாளை அழைத்துவந்து அவளை கெடுத்துப்போட்டான். அதனால் அவள் கற்பவதியுமானாள். அந்த கருவுக்கு உரியாவை காரணம் காட்டிவிடலாம் என்ற நோக்கில் தேசத்திற்காகப் படையிலிருந்து யுத்தம் செய்துகொண்டிருந்த உரியாவை தாவீது அழைத்து அவனை அவனது வீட்டிற்கு அனுப்ப முயன்றான்; உரியாவோ யுத்தம் நடக்கும்போது நான் வீட்டிலிருப்பது எப்படி என்று வீடு செல்ல மறுத்தவிட்டான். அவனது பதில் தாவீதுக்கு நல்லதோர் சவுக்கடியாயிருந்தது. தாவீது யுத்தத்தின்போது வீட்டில் இருந்ததினால்தானே இந்த பாவத்தில் விழுந்தான். உரியா வீடு செல்ல மறுத்ததினால் தாவீது அவனை போர்முனையில் முன் நிறுத்தும்படி அவனது கைகளிலேயே கடிதம் கொடுத்தனுப்பி அவனைக் கொலை செய்தான். அவன் மரணமடைந்தபோது உரியாவின் மனைவியை தனது மனைவியாக்கிக்கொண்டான் தாவீது. மோகத்தினால் நடந்த சோகமான சம்பவம் இது.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்பவர்கள், அதனால் கரு உண்டானால், அதனை அழிக்காமல் அதே பெண்ணுடன் அந்த குழந்தையையும் வைத்துக்கொண்டே திருமணம் செய்துகொள்ளும் தைரியம் உண்டாகவேண்டும். இது யாருடைய குழந்தை என்று யாராவது கேட்டால், எங்களுடையதுதான் என்று சொல்வதில் எதற்கு வெட்கம்? அது உங்கள் இருவருக்கும் பிறந்ததுதானே. நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப்படாது என்று கருதினால் திருமணம் வரைக் காத்திருங்கள் அடிக்கடி பாலுறவும், கருக்கலைப்பும் சிசுவை மாத்திரமல்ல உங்களையும் அழித்துவிடும் ஜாக்கிரதை.

என்னோடு உடலுறவு கொண்டவன் ஓடிப்போய்விட்டான்; கருக்கலைப்பு செய்யக்கூடாது என்றால் என் வயிற்றில் வளரும் குழந்தையை நான் என்ன செய்வது? என்று கேட்டால், நீங்கள் அதனை ஊராருக்கோ, உறவுக்கோ அறியாது பெற்றெடுத்து அதனை ஆநாதை இல்லங்களிலோ, பிள்ளை இல்லாத தம்பதியினரிடத்திலோ கொடுத்துவிடலாம். என்றபோதிலும், உங்கள் மனசாட்சியிலிருந்து நீங்கள் வெளியே வருவது கடினம். வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாலும், இந்த நினைவுகள் உங்களை வாட்டி வதைக்கத் தொடங்கும். இறைவனை அண்டிக்கொள்வதால் மட்டுமே நீங்கள் இத்தகையவைகளிலிருந்து விடுதலை பெற இயலும், தயவு செய்து சிசுக் கொலை வேண்டாம்.

கருக்கலைப்பு தவறென்றால், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி உருவாகலாம். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது முற்றிலும் தவறு, பின்னர் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உடலுறவு கொள்வது எப்படி சரியாகும்? இது தவற்றை மறைக்கப் போடும் தப்புக் கணக்கு. குழந்தை உருவாவதைத் தடுத்துவிடலாம், ஆனால் அது கற்பழிப்புதானே. உலுறவினால் கன்னி என்ற அந்தத் தன்மை அழிந்துவிடுமல்லவா. வாலிபனிடத்தில் பாலுறவு கொள்ளுவதினால் பெண் மாத்திரம் கற்பழிக்கப்படுவதில்லை; உடலுறவு கொண்ட அந்த வாலிபனும் கற்பழிக்கப்படுகின்றான். விபச்சாரிகள் மட்டும் உலகத்தில் இல்லை, விபச்சாரன்களும் உண்டு. சட்டங்களை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்துக்கொண்டதால் விபச்சாரன்கள் என்ற பதம் உபயோகத்தில் இல்லாமற்போய்விட்டது. திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் மனைவிக்காக சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியவைகளை அசுத்தப்படுத்துவது நியாயமாகுமா?

திருமணம் முடிக்கும் எண்ணமில்லாமல் காமத்திற்காகவே இணைந்து வாழும் வாலிப ஜோடிகளும் இந்நாட்களில் பெருகிவருகின்றன. கட்டுக்கடங்காத உடலுறவுக்கு இவர்ள் தயங்குவதில்லை. இவர்கள் திருமணம் முடிக்கும் நோக்கத்தில் அல்ல, தங்கள் காமப் பசியினை நிறைவேற்றும் ஒப்பந்தத்துடன் இணைந்துகொண்டவர்கள். திருமணம் வரும்போது அவரவர் வேறு நபருடன் திருமணம் செய்துகொள்ளும் மனமுடையவர்கள். இப்படி நடந்தாலும் அவர்களது பழைய வாழ்க்கையின் பாவங்கள் அவர்களைத் தொடராமல் விடுவதில்லை. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் (எண்ணாகமம் 32:23) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. இப்படிப்பட்ட பாவத்தினைச் செய்துவிட்டு திருமண வாழ்க்கையினை சந்தோஷமாகத் தொடர மனசாட்சி எப்படி இடம் கொடுக்கும். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுவிப்படாததாயுமிருப்பதாக (எபிரேயர் 13:4). புசைட கசநைனெ வைத்துக்கொள்வோரின் நிலையும் இந்த ஆபத்திற்குத் தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. மறைமுக உறவு என்றும்உனக்கு மன நோவுதான்.


ஒருதலைக் காதல்





எனது விருப்பம் நிறைவேறவேண்டும் என பைத்தியமாய் அலையும் மனதுடையவர்களுக்கு வைத்தியம் செய்வது கடினமானது. எனக்கு வேண்டும் என்ற குணமே மனிதனிடத்தில் எப்பொழுதும் மேலோங்கி நிற்கின்றது. எனக்கு அவள் வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளுக்கு நான் வேண்டுமா என்ற அவளது விருப்பத்தையும் அறிந்துகொள்வது அவசியமல்லவா. ஒரு பெண்ணை விரும்புகின்றாய், அந்தப் பெண்ணுக்கு உன்மேல் விருப்பமில்லை, ஆனால் அவளது அழகையும் மற்றவைகளையும் பார்த்து அவளை விட்டுவிட உனக்கு மனதில்லை, எப்படியாகிலும் அவளைத் திருமணம் செய்துகொள்ளவே;ணடும் என்ற எண்ணம் உனக்குள் உருவாகின்றது; இது எத்தனை கொடுமையானது; இதுவே ஒருதலை விருப்பம். இப்படிப்பட்ட நிலை உருவாகும்போது அதனை விட்டுவிடுவதே உச்சிதமானது. அவளுக்கு விருப்பம் இல்லாதபோது அவளது வீட்டாரைக்கொண்டோ மற்றவர்களைக் கொண்டோ அவளை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்துவது தவறானது. அப்படிச் செய்தால் உனது திருமண வாழ்க்கை சந்தோஷமாயிராது என்பது நிச்சயம். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் இருந்தால்தான் நல்ல இல்லறம் அமையும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லை என்பதை அறிந்தால் அப்பெண்ணுக்கு எதிரியாக அவளை அழித்துவிடவேண்டும் என்ற வெறியுடன் அலையும் வாலிபர்களும் சமுதாயத்தில் உண்டு.

உன்னைக் கட்டாவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றால் பரவாயில்லை தற்கொலை செய்துகொள்ளட்டும் (தற்கொலையை ஆதரித்து அல்ல அது தவறானது) அதற்காக, அவனை விவாகம் செய்து நீ தற்கொலை செய்துகொள்ளவேண்டாம்.

சிலர் தான் விரும்பம் நபர் தன்னை விரும்பாததால் உலகமே இருண்டு விட்டதைப் போல உணர்வுக்குள்ளாகிவிடுவார்கள். தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாததால் துக்கமடைந்து மதுபானத்தினால் தனது உடலைக் கெடுத்துக்கொள்ளும் வாலிபர்களும் உண்டு. யாருக்காவோ நீ உன்னை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? அவளை நினைத்து நினைத்து ஏங்கி உன்னை அழித்துக்கொள்வதினால் உனக்குக் கிடைக்கும் பலன் என்ன? வரப்போகின்ற நல்ல வாழ்க்கையைக் கூட அனுபவிக்க இயலாத வருத்தம்தான் உன்னை கவ்விப்பிடிக்கும். தாடி வளர்த்துக்கொண்டும், சோகப்பாடல் பாடிக்கொண்டும் இருக்க அவசியமில்லை; உனக்குரியது உனக்கு உண்டு.

வேதாகமத்தில் ஆபிரகாம் தனது குமாரனாகிய ஈசாக்கிற்கு பெண் பார்க்க தனது வேலைக்காரனை அனுப்பினான். நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான் (ஆதி 24:8). பெண் நமது பின்னே வர மனதில்லாவிட்டால், நாம் அதற்குப் பின்னால் செல்லவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்நிலை ஏற்படும்போது நமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ள நமக்குப் பெலன் வேண்டும்.

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் பார்க்கச் சென்ற வேலைக்காரன், இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் (ஆதியாகமம் 24:13,14) என்று ஜெபித்துவிட்டு அந்த வேலைக்காரன் பெண் தேட புறப்பட்டான். அவன் ஜெபித்தது போலவே அங்கே நடைபெற்றது; ரெபேக்காள் என்ற பெயருடைய பெண் அந்த வேலைக்காரனிடத்தில் அப்படியே சொன்னாள். ஆனால், அந்த வேலைக்காரன் உடனே கர்த்தர் பெண்ணைக் காட்டிவிட்டார் என்று ரெபேக்காளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போகவில்லை, வீட்டிற்குப் போய் பெண் கேட்டால் தருவார்களோ இல்லையோ என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. பெற்றோரின் விருப்பம், அனுமதி பிரதானமானது என எண்ணியவன் அவன்; எனவே, ரெபேக்காளின் பெற்றோரின் அனுமதிக்காக அவளது வீட்டிற்குச் சென்றான். கர்த்தர் காட்டிவிட்டார் என்று கிணத்தண்டையிலிருந்து அப்படியே கூட்டிக்கொண்டு ஓடிப்போகவில்லை, கடத்திச் செல்லவில்லை. ரெபேக்காளின் வீட்டிற்குச் சென்ற பின்னர் ரெபேக்காளின் பெற்றோரைப் பார்த்து, 'இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான் (ஆதியாகமம் 24:49). தேவனிடத்தில் அவன் வேண்டிக்கொண்டதுபோலவே நடந்தாலும், ரெபேக்காளின் பெற்றோரின் அனுமதி கிடைக்காவிட்டால் வேறு பெண்ணைப் பார்க்க அவன் ஆயத்தமாயிருந்தான். கர்த்தரிடத்தில் அவன் வேண்டிக்கொண்டதுபோலச் செய்ய, ரெபேக்காள் என்ற ஒரே பெண் மாத்திரமா உண்டு; இன்னும் அநேகம்பேர் இருப்பார்கள்; அப்படிச் சொல்லும் பெண்ணும் மேலும், அவளின் பெற்றோரும் சம்மதிக்கும் பெண் வேண்டும் என்பதே அவனது நோக்கமாயிருந்தது. பெண்ணை மாத்திரம் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது பிடித்திருக்கிறது என அடம்பிடித்து, அவளது பெற்றோரின் சம்மதமின்றி மனைவியாகக் கொள்ள நினைப்பது தவறு.

பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், கர்த்தர் எனக்குக் காட்டிவிட்டார்; நான் அந்தப் பெண்ணை தரிசனத்தில் பார்த்தேன் அவள் எனக்குரியவள் என்று கூட்டிக்கொண்டு ஓட நினைப்பவர்கள் மேற்கண்ட இந்த வேதாகமத்தின் சம்பவத்தை நினைவில் கொள்ளவேண்டும். கர்த்தரே காட்டியிருந்தாலும், அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லையென்றால், வேறு திசையில் பயணிக்க நீ ஆயத்தமாயிருக்கவேண்டும்; அதற்கு உனது மனது ஒத்துக்கொள்ளவில்லையென்றால் நீ அடிமையாகிவிட்டாய் என்றுதானே அர்த்தம்.

வாலிபர்கள் திருமணத்திற்காக ஜெபிப்பது நல்லது, ஆனால் குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்காக ஜெபத்தில் பெயரைச் சொல்லி தொடர்ந்து ஜெபிப்பது அத்தனை சரியானதன்று. தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லிச் ஜெபிக்க ஜெபிக்க அவளது பெயர் உனது நினைவிலும், உணர்விலும் கலந்துவிடும் ஆபத்து உண்டாகும். ஆண்டவரே உமக்குச் சித்தமானால் நடக்கட்டும் என்றுதான் ஜெபிப்பாய், ஆனால் எப்படியும் அது நடக்கவேண்டும் என்ற உனது ஜெபத்தில் ஆண்டவரை நிர்ப்பந்திக்கும் நிலைக்கு அவரைத் தள்ள முயற்சிப்பாய்; தேவனை உன்னால் மாற்ற முடியுமா? யாராவது ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கும் வாலிபனின் மனது இறைவனால் பறிக்கப்பட்டது என்பதை நம்புவது சந்தேகத்திற்குறியது. திருமண வயதினை எட்டும்போது முறையாக பெரியவர்களின் துணையோடு அவர்களிடத்தில் தான் எப்படிப்பட்ட பெண்ணை எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்லி, தேவனின் துணையோடு தேடிக் கண்டுபிடிப்பதே சரியான வழி. 

காதலித்து சந்தோஷமாய் வாழுபவர்களும் உண்டு, வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்களும் உண்டு. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டும் சந்தோஷமாய் வாழுபவர்களும் உண்டு வாழ்க்கையில் துன்பத்தைச் சகிப்பவர்களும் உண்டு. இருபுறமும் குறைகள் இருக்கின்றதே, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டாலும் சிலரது வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று நீங்கள் எண்ணலாம். நான் இப்பதில்களை நியாயந்தீர்க்க அல்ல சரியான முறை பெற்றோர்களால் தீர்மாணிக்கப்படுவதே என்பதை வலியுறுத்தி, அவர்கள் உங்கள் துணையைத் தேடும்போது நீங்களும் ஒருவராய் பெற்றோருடன் இணைந்துகொள்ளவேண்டும் என்பதையே நினைப்பூட்ட விரும்புகின்றேன். பெற்றோர் பெண் தேடும்போது சில வாலிபர்கள் எதுவுமே பேசுவதில்லை; ஊமையாகவே இருந்துவிடுவார்கள். அவர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவைப் பொறுத்தே இந்த நிலை ஏற்படுகின்றது. திருமணம் முடிந்த பின்னர் நான் அப்படி படித்த, வேலை பார்க்கின்ற, கலரான, அழகான பெண்ணைக் கட்ட நினைத்தேன் என்று பெற்றோரை நொந்துகொள்ளுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கான வாழ்க்கைத் துணைத் தேடலில் பெற்றோருடன் நீங்கள் ஏன் இணைந்து செயல்படக்கூடாது? அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.


டிப்ஸ் :


வாலிப வயதினை அடைந்தவர்கள் எதிர்பாலருடன் வைத்துக்கொள்ளும் உறவிலும், பேச்சிலும் அதிக எச்சரிக்கை தேவை. வீட்டிலேயெ முடங்கிக்கிடக்கவேண்டும் என்பதில்லை, கவனமாயிருக்கவேண்டும். தனது வயதுள்ளவர்களுடனானாலும், தன்னைவிட வயதில் குறைவாகவே, அதிகமாகவோ உள்ள எதிர்பால் நபரிடம் கவனமாகவே நடந்துகொள்ளவேண்டும். நீங்கள் நல்ல மனநிலையுடன் காணப்பட்டாலும், அவர்கள் உங்களை இழுத்துவிடும் ஆபத்து உண்டு. 

பேசவேண்டியவைகளைத் தவிர்த்து தேவையில்லாத உறையாடல்கள் அவசியமற்றவைகளைத் தள்ளிவிடவேண்டும். பெரியவர்கள் முன்னிலையில் எதிர்பாலருடன் பேசுவது முற்போக்கான பாங்கு; தவறான எண்ணமில்லையென்றால் பயம் எதற்கு? எதிர்முனையிலிருந்து 'ஐ டுழஎந லுழர' வந்தால் அதனை அங்கீகரிக்காமல் விலகிவிடுவது நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை. யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது. 

பெற்றோருடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். பெற்றோருடன் நேரம் செலவழிக்கப் பழகுங்கள்; எப்பொழுதும் உங்கள் நண்பர்களே தஞ்சம் என்று கிடக்காதிருங்கள். உங்களது வாலிபத்தின் கேள்விகளை தயங்காமல் பெற்றோரிடத்தில் கேட்க முற்படுங்கள்; உங்களுக்கான பதில் அவர்களிடத்தில் உண்டு; இதில் வெட்கம் எதற்கு? 

காதலையும், காம உணர்வுகளையும் தூண்டும் புத்தகங்களையும், சினிமாக்களையும் விட்டு விலகுங்கள்; இவைகள் உங்கள் மனதை தீமைக்கு நேராக இழுத்துச் செல்லும் சக்தி கொண்டவைகள். 

பெற்றோரின் ஆலோசனைக்கோ, அறிவுரைக்கோ சட்டென கோபப்படாதிருங்கள்; கண்டிக்கப்படும்போது மௌனம் தேவை; ஐயங்களை வெறுக்காமல் அவர்களிடமே கேளுங்கள். பெற்றோரை உங்கள் எதிரியாக நினைக்காதிருங்கள். பெற்றோரைப் பற்றி குறை பேசுவதை விட்டுவிடுங்கள். இந்தக் குடும்பத்தில் ஏன் பிறந்தோம் என்று மற்ற குடும்பத்தோடு மற்ற பெற்றோரோடு உங்கள் குடும்பத்தை ஒப்பிட்டு உங்களுக்கான தனித்தன்மையை இழந்துவிடாதிருங்கள். பெற்றோரை பாராட்டுவது நல்லது; அவர்களது திருமண நாட்கள், பிறந்த நாட்களை உங்கள் நினைவில் வைத்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் எடுத்துத்தரும் உடைகளைக் குறித்தோ, உணவினைக் குறித்தோ குறைவாக மதிப்பிடாதிருங்கள். அவர்களது பிள்ளை என்ற ஸ்தானத்தை அவர்கள் மரித்தாலும் நீங்கள் மரிக்கும்வரை மாற்ற இயலாது என்பதை மறந்துவிடவேண்டாம்.


பெற்றோரின் பங்கு



ஒரு பெண்ணையோ அல்லது வாலிபனையோ விரும்பும் பிள்ளைகள் கொண்ட பெற்றோர் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகள் தங்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது உடனே கோபப்படாமல் சாந்தமாக, அமைதியாக அவர்களது வார்த்தைகளைக் கேட்கவேண்டும். அவர்களது வார்த்தையினாலேயே அவர்கள் விருப்பத்தின் நிலை எத்தனை உறுதியானது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். பிள்ளைகள் பேசத் தொடங்கிய உடன் கோபப்பட்டு பேசி பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. பிள்ளைகள் உடனே உங்கள் பதிலை எதிர்பார்த்தாலும், நீங்கள் சரி என்றோ அல்லது வேண்டாம் என்றோ சொல்லிவிடாமல் ஓரிரு நாட்கள் யோசித்து அந்த பெண்ணைக் குறித்து விசாரித்து நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தகுந்தவளா, அந்த வீட்டில் கேட்டால் கொடுப்பார்களா அல்லது பிரச்சனை ஏதும் உண்டா போன்ற காரியங்களை மறைமுகமாக நம்பிக்கைக்குறிய சில நபர்களின் துணையோடு செய்யவேண்டும். தகுந்தது அல்ல என்று அறிந்த பட்சத்தில் அதனை கோபத்துடன் சொல்லாமல் மெதுவாக அவர்களை அழைத்து சாந்தமான முகத்துடன் அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். உங்களது எதிர்மறையான பதிலுக்கு அவர்களது நிலை என்ன? என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இச்சமயத்தில் அவர்கள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கின்றீர்களா இல்லையா என்பது தெளிவாகிவிடும். ஆயத்தமாயிருப்பதாகத் தெரிந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுத்து பின் வரும் நாட்களில் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் செலவிட்டு அவர்களது மனதை பெற்றோர்கள் தங்கள் வசம் இழுத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிராவிட்டால், அவர்களை அவர்கள் பாதையில் விட்டுவிடுவது நல்லது. அவர்களுக்கு விரோதியாக அவர்கள் மாறி அவர்கள் தங்களை அழித்துக்கொள்ளும் மனநிலைக்கு பிள்ளைகளைத் தள்ளிவிடக்கூடாது. பட்டு திருந்தும்போது பெற்றோரின் நினைவு வருவது நிச்சயம். பிள்ளைகளின் விரோதமான போக்கு உங்களுக்கு மனநோவைக் கொடுப்பது தவிற்க்கமுடியாதது. காலம் செல்லச் செல்ல நிகழ்ந்தவை சாதகமாக கைகூடிவரும்போது அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கவேண்டாம். வீட்டை விட்டு வேறொருவருடன் ஓடிவிட்டாள், இனி நான் உனக்குத் தாய் அல்ல தந்தையும் அல்ல என்று நீங்ள் சொன்னாலும் அந்த ஸ்தானத்தை மாற்ற உங்களால் கூடாது. பல வருடங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்தால் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாயிருங்கள்; நடந்ததை நினையாதிருங்கள்.

டிப்ஸ் : குழந்தையாய் இருக்கும்போது பெற்றோர்கள் மடியிலுமு; தொட்டிலிலும் வைத்து தாலாட்டி பாட்டுபாடுவது அவர்களுடன் நேரம் செலவிடுவது இயல்பான ஒன்று; என்றபோதிலும் பிள்ளைகள் வளர வளர வாலிபப் பருவத்தை அடையும்போது இது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே போய்விட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உலகத்தில் அவர்கள் வாழும்போது குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மறப்பது இயல்பானது. இதனைப் பக்குவமாக கையாளவேண்டும். வாலிப வயதிலான பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவது, தேனீர் அருந்துவது, சுற்றுலா செல்வது போன்ற காரியங்களை நீங்கள் செய்யலாம். அவர்கள் உங்களை விட்டு விலகி வேறெங்கும் ஒட்டிக்கொள்ளுவதற்கு முன்னர் நீங்கள் அவர்களுடன் ஒட்டிக்கொள்ளவேண்டும். திறந்த மனதுடன் பேசவும், அவர்களுடன் சிரித்து விளையாடவும் வேண்டும். குடும்பத்தில் நீங்கள் மாதிரியாக வாழ்வது மிக மிக முக்கியமான ஒன்று. கணவன் மனைவி இடையிலான உறவில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன்னோடியாக இருக்கவேண்டும். பிள்ளைகளை கண்டிப்பது தவறல்ல, ஆனால் எதற்காகக் கண்டிக்கின்றோம், தண்டித்தோம் என்பதை அவர்களுக்குச் சொல்லாமல் இருப்பதும், ஒருமுறை தண்டித்துவிட்டு பின்னர் அதையே நினைவில் கொண்டு அவர்களை எப்போதும் கோபத்துடன் பார்ப்பதும் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான உறவுகளின் விரிசலை பெரிதாக்கிவிடும். அவர்களது செயல்களைப் பாராட்டவும், பிள்ளைகளது பிறந்த நாட்களை கொண்டாவும் பழகவேண்டும். தங்கள் பிள்ளைகளின் குறைவுகளை வெளியில் மற்றவர்களிடத்தில் பேசுவதைத் தவிற்கவேண்டும். பெற்றோர்கள் தங்ள் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களையே கொடுக்க விரும்புகின்றனர் (லூக்கா 11:13); என்றபோதிலும், தங்கள் பிள்ளைகள் யாரையாவது திருமணம் முடித்தக்கொள்ள விரும்பினால், அந்த விருப்பத்தை பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்லும்போது, அதனை லாவகமாக கையாளும் தன்மை வேண்டும். எதையும் குறித்து விசாரிக்காமல் உடனே தங்கள் பிள்ளைகள் மேல் மூர்க்க கோபமடையக் கூடாது. தீர விசாரித்த பின்னர் நிறைவுகiயும் குறைவுகளையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். நல்ல பெண் அல்லது வாலிபன் என்று பெற்றோருக்கு தெரியவந்தால் அதனை அங்கீகரிப்பது தவறல்ல. ஜாதியைக் காட்டி அதனைத் தடுத்து நிறுத்தும் போக்கு காணப்படக்கூடாது. பிள்ளைகளுக்குத் திருமண துணை தேடும்போது பெற்றோர்கள் அதனை அவர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். நாங்கள் பார்ப்பதை நீ கட்டித்தான் ஆகவேண்டும் என வற்புறுத்தக்கூடாது. அவர்களின் விருப்பங்களைத் தள்ளிவிடாமல் அதற்கும் இடமமளிக்கவேண்டும்.

எனக்குத் திருமண வயது வந்தபோது, எனது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கினர். அப்போது எனது தந்தை அநேக பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தார். A - AGE, B - BEAUTY, C - CHARACTER, D - DOWRY, E - EDUCATION, F - FAMILY என்ற இந்த ஆறு காரியங்களில் உனக்கு எது தேவை என்று எனது தந்தை என் முன் வைத்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் நான் மௌனமாக இருந்தேன். அப்போது என் தந்தை இவைகளில் முக்கியமானது குணமே அதற்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்தார். தந்தை எனக்குக் பாடிக்காட்டிய பாடல் ஒன்று இன்றும் எனது நினைவில் நிற்கிறது.


நல்ல பெண்ணைப் பாரு என் தூதா

நல்ல பெண்ணைப் பாரு


அழகு குணமுள்ளவள்(ன்) அவள் நல்ல ஜோடி 

அழகில்லையானாலும் குணத்தையே தேடு

பழகு நற்குணமில்லா அழகியின் வீடு

பாம்பு புலி கரடி வாழ்ந்திடும் காடு


நல்லவள்(ன்) ஏழையானாலும் தள்ளாதே

நானூறு போனாலும் நீயும் விடாதே

பொல்லாதவள் கையில் சிக்கிவிடாதே

புலியைக் கொண்டுவந்து தெருவில் விடாதே


நகைகள் தரித்து மஞ்சள் ஆடைகள் பூசி

நாடெங்கும் தெரியாது நகைத்து கை வீசி

கொகுசுடன் நடப்பவள் ஆயிரம் தாசி

காசுடன் வந்தாலும் அவள் வேண்டாம் சீ சீ

(இந்தப் பாடல் பெண்களை மட்டும் குறிவைத்து எழுதப்பட்டது என நாம் எண்ணிவிடக்கூடாது; இதே நிலையிலிருக்கும் ஆண் மக்களுக்கும் இது பொருத்தமானதே)

சரியான நேரத்தில் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட துணையை பெற்றோர் தேடித்தர, உங்கள் திருமண வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்


கேள்விகள்


கீழே உள்ள கேள்விகள் அனைத்தும் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் என்னிடத்தில் வாலிபர்கள் கேட்டவை; அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் உங்களுக்கும் பதிலாகக்கூடும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன்.


நான் பார்த்த பெண்ணின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது; ஆனால் எனது பெற்றோர் அவளை ஏற்க மறுக்கின்றனர்; என்ன செய்வது?

முழு நம்பிக்கை என்று எதைச் சொல்கிறாய் என எனக்குப் புரியவில்லை. அவள் மேல் உள்ள ஆசையினால் வருகின்ற வார்த்தைகள் இவை. பெற்றோருடைய பந்தம் எல்லா சொந்தங்களைக் காட்டிலும் பிரதானமானது, முக்கியமானது என்பதை அறிந்துகொள். உனக்கு மட்டுமல்ல நீ மணமுடிக்கும் பெண் உனது குடும்பத்துடன் இசைந்து வாழவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. திருமணம் முடித்து பெற்றோரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்க்கை நடத்தும் (வேலையின் நிமித்தம் செல்வோரை அல்ல, பெற்றோரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு போவோர்) நிலை இன்று தேசமெங்கும் பெருகி வருகின்றது. இதற்குக் காரணம், மணமுடித்த பெண் குடும்பத்துடன் ஒத்துப்போகாததே. பெண்ணுக்காக பெற்றோரையே ஒதுக்கும் நிலை உருவாகிவிடுகின்றது. பெற்றோர் எந்த காரியத்தைக் காட்டி வேண்டாம் என்று சொல்லுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அது சரியானது என்று அறிந்தால் அவர்களுக்கு கீழ்ப்படிவதுதானே நல்லது. ஒரு பெண்ணுக்காக பெற்றோரை விலைகொடுப்பது நியாயமானதன்று. எப்போதும் பெற்றோருடன் இணைந்துகொண்டால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.

வேதத்தில் ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான், அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதியாகமம் 26: 34,35) என்று வாசிக்கின்றோம். பெற்றோரை மனமடிவாக்கும் குணமுடைய பெண் தேவையா? அவளால் ஒரு நாள் உனக்கும் மனமடிவு உண்டாகும்.


முதன் முதல் ஒரு வாலிபன் தனது காதலை என்னிடம் வெளிக்காட்டும்போது நான் என்ன செய்யவேண்டும்?

விலகிச் செல்வதுதான் உகந்தது, வலையில் மாட்டிக்கொண்டு சேலையை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும். நீ அவனோடு ஏதாகிலும் சந்தர்ப்பங்களில் நெருங்கிப் பேசியிருந்தால் அவனுக்கு இந்த காதல் எண்ணம் வந்திருக்க வாய்ப்பு உண்டு. அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் நீ அவனிடமிருந்து உன்தை; தூரப்படுத்திக்கொள். நீ விலகிச் சென்றாலும் அவன் உன்னைத் தொடர்ந்து வந்தால் பெற்றோரிடமோ, பெரியவர்களிடமோ எடுத்துச் சொல்லி மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கன்னியே நீ கண்ணாடி காதலிக்கும் வாலிபன் உன்னைத் துண்டாடவிடாதே.


நான் ஒரு வாலிபனை சகோதரனாகத் தான் எண்ணிப் பழகினேன், ஆனால், அவன் இப்போது என்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான், சகோதரனைப் போலப் பாவித்து பழகிய எனக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருக்கிறது.

இத்தகைய நிலை இன்றைய நாட்களில் பலருக்கு உண்டாகின்றது. உனது நிலையைக் குறித்து முதலில் நீ திட்டமாயிருக்கவேண்டும். நீ நண்பனாகத்தானே எண்ணி பழகியிருக்கின்றாய், எனவே நண்பனிடம் சொல்வதுபோலவே பொறுமையாய், மெதுவாய், நான் காதலிக்கும் நோக்கத்தோடு பழகவில்லை, நீ என்றும் எனக்கு நண்பன்தான் என்று உனது நிலையை அவனு;ககுப் புரிய வை. புரிந்துகொண்டால் தொடரட்டும் நட்பு, இல்லையென்றால் தொலை நிங்க அவன் எல்லைக்குள் நுழையாதிருப்பது உத்தமம். என்றபோதிலும், நண்பர்கள் பிரிவதால் உண்டாகும் வருத்தம் உனக்கும் உண்டாகும், அது நட்பினால் உண்டான வலிமை, அதனைத் தாங்கிக்கொண்டு மறந்துவிடும் தன்மை உனக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்பாலரை நண்பர்களாகக் கொள்ளாதிருப்பது சாலச்சிறந்தது. முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை, அதில் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டவே இப்படிச் சொல்கின்றேன்.


ஒரு வாலிபனுடன் தவறான உடலுறவு கொண்டுவிட்டேன்; இப்போது அதனை விட்டுவிட்டேன்; தவறென்று எண்ணுகின்றேன்; அதுபோன்ற காரியங்களை இனி செய்யமாட்டேன் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனாலும் எனது மனதில் அந்த வடு அவ்வப்போது வந்து என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது; நான் என்ன செய்யவேண்டும்?

தவறு என்று நினைத்துவிட்டால், திருந்திவிட்டால் எந்த மனிதனுக்கும் மறுவாழ்வு உண்டு; கவலைப்படாதே. விழுந்ததையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிராமல், வரும் வாழ்க்கையை வடிவமைக்கப் பிரயாசப்படு. வேதத்தில் உள்ள ஒரு வசனத்தை உனக்கு ஞாபகமூட்டுகின்றேன். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் (எபிரேயர் 9:14). இயேசுவை அண்டிக்கொண்டால் அந்த மனநிலையிலிருந்து உங்களை விடுவிக்க அவர் போதுமானவர். அவர் மன்னித்ததையும், மறந்துவிட்டதையும் நீங்கள் நினைத்து நிளைத்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை.


எனது காதலைக் குறித்து பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கிறது? ஏதாவது வழி உண்டா?

பெற்றோரிடம் சொல்ல பயமாயிருக்கிறது என்று நினைத்து அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய்விடாதிருங்கள். ஓடிப்போவது கோழையான முடிவு. உங்களது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ, உங்கள் உறவினர்களில் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மூலமாகவோ தெரிவிக்க முற்படலாம். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் வரும் நபர் இறை பக்தி உள்ளவராயிருப்பாரென்றால் நலமாயிருக்கும். என்னைப் பொருத்தவரையில் பெற்றோருக்கு இடையே பேசுவதற்கு தரகர்கள் தேவையில்லை. நல்ல நபர்கள் நடுவாக செயல்படுவார்களென்றால் அவர்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் சரியான ஆலோசனை கொடுக்கமுடியும். ஆனால், நடுவாக செயல்படும் அந்த நபரின் சரியான தீர்வுகளுக்கு கீழ்ப்படிய நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்.


எனது காதலிக்கு மற்ற வாலிபனுடன் தொடர்பு இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகின்றேன்; என்ன செய்வது?

உடனே காதலை மறந்துவிட்டு, காதலியை விட்டுவிடுவது நல்லது. காதலித்தால் காதலியை நம்பினால்தான் அது காதல், நம்பாவிட்டால் மோதல் நிச்சயம் உண்டாகும் எச்சரிக்கை. சந்தேகம் என்ற வேர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால், அது வளர்ந்து வளர்ந்து வாழ்க்கையை நிச்சயம் அழித்துவிடும். உனக்கு சந்தேகம் உண்டானால் முதலில் உனது மனநிலையை சோதித்து அறிவது நல்லது. என்னை நேசிக்கும் நபர் யாரிடமும் பேசக்கூடாது என்ற மனநிலை இருந்தாலேயே இந்நிலை உண்டாகும். சாதாரணமாக யாரிடமும் பேசுவதைக் கூட மனம் சகித்துக்கொள்ளாது. இந்த சந்தேகத்துடன் அவளை திருமணம் முடித்தால், நீ வெளியே செல்லும்போது வீட்டில் மனைவியை உள்ளே வைத்துவிட்டு வெளியே பூட்டிவிட்டுச் செல்லும் கீழ்த்தரமான நிலையைக் கூட நீ கையிலெடுக்கும் சூழல் உண்டாகும்.


என்னைக் காதலித்தவன் திடீரென இப்பொழுது நீ வேண்டாம் என்று சொல்லுகின்றான்; என்ன செய்வது?

எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவன் காமத்திற்காக உன்னிடத்தில் பழகினவனாக இருக்கலாம். அப்படி நாங்கள் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று சொன்னால், அவனிடம் காரணத்தை அறிந்துகொள்ள முற்படலாம். நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்காவிட்டால், நம்பகமான நடுநிலை மனிதரின் துணையைத் தேடலாம். வீட்டில் எதிர்ப்பு, ஜாதி, மதம் போன்ற ஏதாவது பிரச்சனைகள் காதலனின் வீட்டில் உண்டாகி அதற்கு உனது காதலன் சம்மதித்து பெற்றோர் சொல்வது சரியே என்று நினைத்திருந்தால், விலகிக்கொள்; வேறு வழி இல்லை. நான் அவனைக் காதலித்தது ஊருக்கெல்லாம் தெரியுமே என்னை திருமணம் முடிக்க யார் வருவார் என்று நினைப்பதெல்லாம் மெல்ல மெல்ல மறைந்துபோகும். காதலில் தோற்றவளாக அல்ல மனந்திருந்தி நற்பெயரெடுக்க முற்படு.


என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று என்னை மிரட்டுகின்றான் என்ன வழி?

இப்படிச் சொல்லும் சிலர் சாவதுண்டு, சிலர் அப்படியாவது மிரட்டிப் பார்ப்போம் என்று காய் நகர்த்துவதுமுண்டு. உன் பக்கம் தவறு இல்லை என்றால் அந்த சாவுக்கு நீ பொறுப்பல்ல; அது தற்கொலை, நீ கொலையாளியாகமாட்டாய். அவனது வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு அது. அவன் செத்துவிடுவேன் என்று சொல்வதால் அவனைத் திருமணம் மடித்து நீ வாழ்க்கையில் செத்துவிடாதே. ஒருதலைக் காதல் கொள்ளும் வாலிபர்கள் இம்முறையைக் கையில் எடுப்பதுண்டு. காதலிக்கும்போது, புகைப்படங்கள், கடிதங்கள் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தால்தான் பயம் உண்டாகும். இந்தக் காதலில் உனக்கு எந்த பங்கும் இல்லை என்றால் கவலைப்படாதே.


காதலிக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு எனது காதலியின் ஞாபகமே வருகின்றது; படிக்க முடியவில்லை. அவளைக் காணாவிட்டால் தலையே பித்துபிடித்ததுபோல இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள்; நீ காதலிக்கவில்லை கன்னி என்னும கண்ணியில் மாட்டிக்கொண்டாய் என்பதை உனது வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றன. உன்னை நீயே விடுவித்துக்கொள் தண்ணீரின் கீழே ஆழமாய் மூழ்கிவிட்டு திரும்பி சுவாசிக்கக் கூட மேலே வர முடியாத நிலையைப் போல இருக்கிறது உனது நிலை. நீ இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள். அதற்காகச் செயல்படத் தொடங்கு. உனது வாழ்க்கையின் இலட்சியம் உனது கண்களுக்கு முன் வரட்டும். அவளைச் சிறியதாக்கவேண்டும் என்றால், இறைவனை உனது வாழ்க்கையில் பெரியவராக மாற்றிக்கொள். இறைவனின் அன்பை நீ உணர்ந்துகொண்டால் அது எல்லாவற்றிற்கும் மருந்து.


காதலிக்கும் நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை, தொட்டுப் பழகுகிறோம்; அவ்வப்போது முத்தங்களைப் பறிமாறிக்கொள்கின்றோம்; இது தவறா?

உனது கேள்விக்கு ஒரே வார்த்தையில் தவறு என்று பதில் கொடுத்துவிடலாம். கண்பட்டு காதல் மலர்வதுண்டு, கைபட்டு கற்பு அழிந்துபோவதுண்டு. அழிவை ஏன் ஆரம்பித்துவைக்கவேண்டும். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருப்பது தவறுதான்; எப்பொழுதுவேண்டுமென்றாலும் தீ பற்றிக்கொள்ளும் ஆபத்து உண்டு தூரமாயிருங்கள், கைகூடி வந்தால் திருமணத்திற்குப் பின்னர் கைகோர்த்துப் போகலாமே.


காதல் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உணர்வு எப்பொழுதும் எனது மனதில் உண்டாகின்றது என்ன செய்வது?

காதலையெ நீ இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்து இது. காதலின் தோல்வியைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடு. நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கும் நண்பர்களுடன் உன்னை இணைத்தக்கொள். அவள் மட்டும்தான் உலகில் பெண் அல்ல, இன்னும் கோடிகள் உண்டு; கோழைத்தனமான முடிவு வேண்டாம். நீ இன்னும் வாழவேண்டிய வசந்தமான வாழ்க்கை ஏராளம் உண்டு; இந்த ஒன்றைக் காரணம் காட்டி அவை அனைத்தையும் அழித்துவிடாதே. இடறிய கல்லுக்காக ஏன் காலை வெட்டிக்கொள்ளவேண்டும். தற்கொலை உணர்வு மேலோங்கியே நின்றால், தேவ ஊழியர்களிடம் சென்று ஜெபித்து ஆலோசனை பெற்றுக்கொள். எது எப்படியானாலும், நீ உனது மனநிலையை மாற்றி இறைவனண்டை சேர்ந்தால் அத்தனையம் மாறிவிடும்; கவலைப்படாதே.


நான் காதலித்த பெண்ணை வேறொருவன் திருமணம் செய்துவிட்டான்; அதனால் அவனை அழித்துவிடவேண்டும் அல்லது அந்த குடும்பத்தை இன்பமாக வாழவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது என்ன செய்வது?

முடிந்துபோனவைகளை முடிச்சு போட்டு தொடர்வது சரியானதல்ல. நடந்தது நடந்ததுதான் நீ மறக்கக் கற்றுக்கொள். அவள் காதலியாக இன்னும் உனது நினைவில் இருந்தால், இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அவர்களை வாழவிடு, நீ வேறொரு வாழ்க்கையைத் தேடு. அவள் உனக்கு ஏதாவது ஞாபகப் பரிசுகளை, வாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தால் அவைகளை இன்னமும் பத்தரப்படுத்தி வைத்திராமல் அவைகளை வீசிவிடுவது நல்லது.


நான் காதலிக்கின்ற வாலிபனோடு ஒருமுறை உடலுறவு கொண்டேன்; அதற்குப் பின்னர் அவன் என்னை நேசிக்காததைப் போலவே உணருகின்றேன்; இது எனது மனதின் பிரம்மையா; பயமாயிருக்கிறது?

கன்னியாக இருந்த நீ காலியாகிவிட்டாய் என்பதை முதலில் உனக்கு நினைப்பூட்ட விரும்புகின்றேன். கற்பு காலியாகிவிட்டதால் உனது மனதில் எழும் உணர்வுகளின் ஒரு பரிமாணம் தான் இந்த நிலை. மேலும், இனிமேல் என்னை விட்டுவிடுவானோ, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளுவானோ என்ற பயம் உனது நெஞ்சில் நிறைந்திருந்தாலும் இந்த நிலை உருவாகும். உன்னைச் சுற்றி வந்தவனை நீ இனி அவனைச் சுற்றிவரும் நிலைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய். உடலைக் கொடுத்துவிட்டு புலம்புவதைக் காட்டிலும், ஞானமாய் விலகியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதல்லவா. பூவில் தேன் அருந்திவிட்டு தேனீ பறந்து செல்வதுமுண்டு, மீண்டும் தேடிவருவதுமுண்டு. தேனை இழந்த மலர் நீ தேனீயைத் தேடிச் செல்வது இயலுமா? மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு உன்னை அவன் அழைத்தால் அதற்கு விலகி இருந்து அவனது பாசத்தைத் தக்கவைத்துக்கொள்ப்பார்; அதற்கு நீ விலகுவதால் அவன் பறந்து சென்றால் மறந்துவிடு; கற்பை இழந்துவிட்டால் நீ கழித்துப்போடப்பட்டுவிடுவாய். எச்சில் இலையாய் நீ எறியப்படுவதைக் காட்டிலும், சரீரமாகிய உனது இலையில் கற்பாகிய சோற்ளை திருமணம் வரை காதலனுக்கு பரிமாறாமல் இருப்பது நல்லது.


நான் காதலித்த வாலிபன் என்னை விட்டுவிட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் இது சரியா?

உன்னைக் காதலித்த வாலிபன் அந்த முடிவை எடுக்காதபோது, நீ மட்டும் ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்? வேறொருவனுடன் வாழுவதை என்னால் நினைத்தக்கூடப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லாதே, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கவும் தெரியவேண்டும். உன்னை மறக்கிறவனை நீ நினைத்திருக்கிறாய், இனி உன்னை நினைக்கிறவனை மணக்கப்பார், வாழ்க்கை மணக்கும். 








புணர்ச்சியாகும் உணர்ச்சி

 




புணர்ச்சியாகும் உணர்ச்சி என்ற இந்தக் கட்டுரையில், வாலிபத்தின் வாழ்க்கையில் உண்டாக நேரிடும் கறைகளையும், அவைகளைக் களையும் முறைகளையும் பகிர்ந்துகொள்ள வாஞ்சிக்கிறேன். நம்முயை வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிகள் தேவனிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக தேவனால் கொடுக்கப்பட்டதல்ல. உணர்ச்சியில் மனிதன் எல்லை மீறும்போதே தேவனை விட்டுப் பிரிந்துபோகிறான்.கோபமும்; ஓர் உணர்ச்சியே. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்;; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே 4:26) என்ற வேதத்தின் போதனையை மிறும்போதே நாம் பாவம் செய்கிறோம். மனிதனில் தேவன் புனிதமாக உடலுக்குள் உருவேற்றி வைத்த உணர்வுகளை சத்துரு கையில் எடுத்து அதனைப் காலத்துக்கு முன்னே கறைப்படுத்த போதிக்கிறான். உணர்வுகளைப் புணர்வுகளாக்கி, உள்ளங்களைக் கறைப்படுத்தி, திரை மறைவிலே வாழும் வாலிப சகோதர சகோதரிகளுக்காக மாத்திரமல்ல, கறைபடாதோரும் தங்களைக் கறைப்படுத்தாமலும், உணர்ச்சியினால் உள்ளத்தைக் காயப்படுத்திக்கொள்ளாமல் காத்துகொள்ளவும் இக்கட்டுரையினை எழுதுகிறேன்.

'கறைகளே என் வாழ்க்கையில் உண்டாகவில்லை' என எந்த வாலிபனும் சொல்ல முடியாது; கறைகளை கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி களைந்திருக்கலாம். மனித வர்க்கம் பெருக, இறைவனால் கொடுக்கப்பட்ட இன்பமாகிய உடலுறவினை அசிங்கமாக, அருவருப்பாக நினைக்கின்றனர் பலர். 'செக்ஸ்' என்ற வார்த்தையினை உச்சரிக்கவே உதடுகள் கூசுகின்றன பலருக்கு. ஆனால், அது இறைவனால் அளிக்ப்பட்ட பரிசு நமக்கு. இறைவன் நமக்குத் தந்ததைத் தவிக்கவேண்டியதில்லை மாறாக, நமது உரிமையை ஒருவரோடு அனுபவிக்கவிடாமல், உருக்குலைத்து, வாழவிடாமல் தடுக்கும் சத்துருவின் தந்திரங்களில் தடம் புரளுவதையே தவிர்க்கவேண்டும்.


யார் செய்த பாவம்?


இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே, இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த உணர்ச்சியை அனுபவிக்க இயலாதோராய் படைக்கப்பட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்து எனது மனம் வரையும் ஒர் ஆலோசனை.

சிலருடைய வாழ்க்கையில் 'செக்ஸ்' என்னும் இந்த அனுபவம் தூரமாகிவிடுகின்றது. திருநங்கைளாக (ஆண்களோ அல்லது பெண்களோ அல்லாது) பிறப்பதினாலோ, அல்லது பெண்ணாகவோ ஆணாகவோ பிறந்தும் உடலில் ஏற்படும் குறைவுகளினாலோ செக்ஸ் அனுபவத்திலிருந்து தூரமாயிருக்க நேரிடும்; மேலும், மிக அரிதாக ஒரு சில பெண்களுடைய வாழ்க்கையில், எத்தனை வைத்தியம் செய்தும் பருவம் வராமலேயே கடந்துவிடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் துவண்டுவிடவேண்டிய அவசியம் இல்லை. தேவன் தன்னை இப்படி படைத்திருக்கிறார் என வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். கையின்றியும், கால் இன்றியும், கண்கள் இன்றியும், காதுகள் இன்றியும், மூளை வளர்ச்சிக் குன்றியும் குழந்தைகள் பிறந்து இவ்வுலக வாழ்க்கையினை எதிர்கொள்வதில்லையா. மூளை வளர்ச்சியற்றோர் தங்கள் வாழ்க்கையை சிந்திக்க இயலாது சந்தோஷமாய் வாழுவதைக் கண்டிருக்கிறேன். எனவே, எங்களை ஏன் இறைவன் இப்படிப் படைத்தார் என சாகும் உணர்வு உண்டானால் அது சத்துருவினுடையது என்பதை அடையாளம் கண்டுகொண்டு, வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.

ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் மற்றும் பூமியில் உள்ள செடிகள், கொடிகள், மிருகங்களையும் படைத்தபோது, 'தேவன் அது நல்லது என்று கண்டார்' (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25) என்றே வேதத்தில் வாசிக்கிறோம். நமக்கு அல்ல, அவருக்கு நல்லது என்று எண்ணும்படியாகவும், தனது திட்டத்திற்கு தீர்மானத்திற்கும் ஒத்ததாகவுமே தேவன் படைக்கிறார்; ஆனால், நாமோ, அவரது படைப்பினை நல்லது கெட்டது, தவறானது சரியானது, தேவையானது தேவையற்றது என பிரித்துப் பார்த்து படைத்தவருக்கே பாடம் சொல்லும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறோம். நமக்கு நல்லதல்லாதாய்த் தோன்றுகின்ற ஒன்று தேவனுக்கு நல்லதாய் தோன்றியபடியினால் படைக்கப்பட்டிருக்கலாம். குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான் (எரே 18:4) என எரேமியா தீர்க்கதரிசிக்கும் இப்படிப்பட்ட பாடத்தையே சொல்லிக்கொடுத்தார்.

ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? (யாத் 4:11) என தேவன் பேசிய வார்த்தைகள் உடலுறவிற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளோரைத் தேற்றவேண்டும். திருமணம் முடித்தால்தான் வாழ்க்கை என்றல்ல, வாழ்வதுதான் வாழ்க்கை. இந்நிலையில் உள்ள ஆண்களும் உண்டு. உங்களை எப்படி தேவன் படைத்திருக்கிறாரோ அப்படியே வாழக் கற்றுக்கொள்ளுங்கள்; அதில் அதிருப்தி வேண்டாம். அதிருப்தி வாழ்க்கையை அழித்துவிடும். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நமது தனித்தன்மையை தரக்குறைவாக்கிவிடவேண்டாம். இந்நிலையில் உள்ள பெண்கள் அல்லது ஆண்கள் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது; அல்லது நான் இப்படிப்பட்டவள், குழந்தையைப் பெற்றெடுக்கத் தகுதியற்றவள் என பகீரங்கமாக ஒருவருக்கொருவர் தெரியப்படுத்தி, அதனை ஏற்றுக்கொள்வோரைத் துணையாகக் கொண்டு, குழந்தையைத் தத்தெடுத்து குடும்ப வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளலாம் தவறில்லை. குழந்தை பிறந்தால்தான் குடும்பம் என்றல்ல, ஒரு ஆண் மற்றும் பெண் கர்த்தரின் சமூகத்தில் இணைந்து வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்வு.

அப்படியே ஆண் பெண் இரண்டு பாலின உணர்வுகளும், அங்கங்களும் கலந்து பிறப்பவர்கள் உண்டு. இவர்கள் 'திருநங்கைகள்' என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் அல்ல, இவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்தானே. குடும்பத்தினரும், உறவினரும் இவர்களை வெறுப்பதினால், தங்களுடன் வைத்துக்கொள்ள மனதில்லாமற்போகிறபடியினால், இத்தகையவர்கள் வீதிக்கு வந்து வாழவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது. குடும்பத்தினருடன் சேர்ந்து வாழலாம், அல்லது அத்தகைய இருவரோ, பலரோ இணைந்து (உடலுறவில் அல்ல) வாழலாம் ஆனால், உடலுறவு இவர்களுக்குத் தூரமான ஒன்று. ஆனால், திருநங்கைகளில் பலர் 'உடலுறவினையே' முக்கிமாகக் கருதுகின்றனர்; இது தவிர்க்கப்படவேண்டியது. ஒருவர் மருத்துவ முறையில் பெண்ணாக மாறி மற்றொரு திருநங்கையுடனோ அல்லது ஆணுடனோ திருமணம் செய்துகொண்டால் அது ஓரினச் சேர்க்கையே.

ஆணும் ஆணும் உடலுறவு கொள்ளக்கூடாது, பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக்கூடாது, அப்படியே திருநங்கையும் திருநங்கையும் உடலுறவு கொள்ளக்கூடாது மேலும் திருநங்கைகள் ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளக்கூடாது. உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. திருநங்கைகள் தேவ பார்வையில் மேலானவர்களே; படைத்தவன் எல்லாவற்றையும் தனக்கு விருப்பமானபடிதான் படைக்கின்றான்; ஆனால், படைப்பு தன்னைத் தானே பார்த்து, தன்னையே தனக்குப் பிடிக்காமல் வாழக்கூடாது. ஆணானாலும், பெண்ணானாலும், திருநங்கையானாலும் நாம் நம்மைப் படைத்த தேவனுக்காக வாழவேண்டியவர்கள். இச்செய்தியினை, சத்தியத்தினை அறியாதபடியினாலேயே திருநங்கைகள் பலரது வாழ்க்கை தங்களுக்கு குடும்பத்திற்க மாத்திரமல்ல தேவனுக்குத் தூரமாகிவிடுகின்றது. ரயில்களிலும், பேருந்து நிலையங்களிலும் பிச்சை எடுக்கும் நிலைக்குரியவர்கள் அல்ல திருநங்கைகள். இன்றைய நாட்களில், ரயிலில் ஆபாசமாகவும், அகங்காரமாகவும், அதிகாரமாகவும், பிடுங்கித் திண்ணும் உரிமையுள்ளவர்களாய்த் தாங்கள் பிறந்தவர்கள் போலவும் தங்களைத் தாங்களே மாற்றிவைத்திருப்பதிலிருந்து திருநங்கைகள் திருந்தவேண்டும்.

படைப்பிலேயே, பிறப்பிலேயே உடலில் உண்டாகும் எந்த ஒரு குறைபாடுகளுக்கம் பிறக்கும் மனிதர்கள் பொறுப்பல்ல. இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் என்று சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்டபோது (யோவா 9:2), இயேசு அவர்களை நோக்கி, இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:3) என்று சொன்னார். நாம் எப்படிப் பிறந்திருந்தாலும், தேவனுடைய கிரியைகள் என்னில் வெளிப்படவே நான் இப்படிப் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணம் இருக்குமென்றால், தேவ சித்தமும் திட்டமும் வாழ்க்கையில் நிறைவேறும். மனிதர்களில் பாகுபாடு இல்லை, தேவன் பாகுபாடு பார்ப்பதும் இல்லை.


மிருகமல்ல, மனிதர்கள்


நாம் எப்படிப் பிறந்திருந்தாலும், குறைபாடுகளுடன் பிறந்திருந்தாலும், உலகத்தின் அத்தனை படைப்புகளைக் காட்டிலும், மனித இனம் இறைவனால் உயர்வாகப் படைக்கப்பட்டது. குறைபாடுகளுடன் பிறக்கும் மனிதர்கள் குடும்பங்களின் அங்கங்களாக வைக்கப்படாதுமல், வெளியிலே விட்டுவிடப்படுவதும், வீதியிலே அப்படிப்பட்டோர் கையேந்தி வாழும் நிலையினை உண்டாக்குவதும் வருந்தத்தக்கது.

எந்த ஒரு விலங்கிற்கோ, பறவைக்கோ, ஜந்துகளுக்கோ அல்லது பூச்சிகளுக்கோ படைத்தவர் தனது சாயலையும், ரூபத்தையும் கொடுக்கவில்லை; மனிதனுக்கு மட்டுமே அதனைக் கொடுத்தார்; எனவே மனிதன் விசேஷித்தமானவன். விலங்கினங்களினின்று மனித இனம் மாறுபட்டது, நாம் தேவனது ரூபத்தின்படியும், சாயலின்படியும் படைக்கப்பட்டவர்கள் (ஆதி 1:26). படைப்புகளில் நாம் விசேஷமானவர்கள் எனவே படைப்புகளை நம்மிலும் விசேஷமாக்கவேண்டாம்; படைப்புகளை படைத்தவனுக்கு ஒப்பாக்கி வணங்கவும் கூடாது. தேவ பார்வையில் மனிதர்களாகிய நாம் விசேஷித்தவர்கள்.

விலங்கினங்களின் உணர்ச்சிகளும், புணர்ச்சிகளும் வித்தியாசமானவைகள். அவைகளுக்கு சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை. ஆணோடு பெண் என்ற ஒரே சட்டதிட்டமே. உதாரணமாக ஒரு மாடு, அதற்குப் பிறந்த இரண்டு குட்டிகள் ஆணும், பெண்ணும் சகோதரர்கள் சகோரிகள் என்று நாம் கண்டாலும், அவைகளின் கண்களுக்கு அப்படி அல்ல. ஒரே மாட்டிற்குப் பிறந்த இரண்டு குட்டிகளும் உணர்ச்சிகளடையும்போது, இனப்பெருக்கம் செய்ய அவைகளை எந்த சட்டமும் தடுப்பதில்லை; மனிதர்களுக்கும் அது விகர்ப்பமாயிருப்பதில்லை. அப்படியே தாய் பசு தனது குட்டியிடமும், தந்தைப் பசு தனது குட்டியிடமும் அப்படியே தாய் தந்தை மாடுகளுக்குப் பிறந்த குட்டிகள் ஆணும் பெண்ணும் உடலுறவுகொள்ளவும் தடையேதுமில்லை. மச்சங்கள், ஜந்துக்கள் மற்றும் பட்சிகளை தேவன் படைத்தபோது, அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார் (ஆதி 1:22). முதலில் பலுகிப் பெருகுங்கள் என்ற கட்டளை கிடைத்தது மனிதனுக்கல்ல; விலங்குகளுக்கே; அப்பொழுது ஆதாம் உண்டாக்கப்படவில்லையே. விலங்குகளுக்கு கட்டுப்பாடற்ற அந்த உணர்வினை பெருகும்படியான ஆசீர்வாதமாக்கி உடலுறவின் விருப்பத்தை படைப்பிலேயே அவைகளுக்குள் வைத்தார் தேவன்.

முதல் மனிதன் ஆதாம் உடலுறவுக்கும், இனப்பெருக்கத்திற்கும் ஏற்றவனாகவே படைக்கப்பட்டிருந்தான், ஏவாளைப் படைத்தபின்னர் ஆதாமின் உடலில் அவர் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. மனித உடலுறவு என்பது தேவனது அனாதி திட்டத்திலேயே இடம் பெற்றிருந்ததை, ஆதாமின் படைப்பில் அறிந்துகொள்ளலாம். ஏற்ற துணையாய் ஏவாள் படைக்கப்பட்டபோதிலும், இருவரும் ஒன்றாயிருந்தபோதிலும், உடலுறவிற்கு அவர்கள் காத்திருக்கவேண்டியதாயிருந்தது. எல்லா மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெயரிட்ட ஆதாம் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டு மனைவியாகக் கொடுக்கப்பட்டவளுக்கு (ஆதி 2:25) 'மனுஷி' (ஆதி 2:23) என்றே பெயரிட்டான். இந்த காத்திருத்தலுக்கு இடையில் நுழைந்து குடும்பத்தைக் கெடுத்தவன்தான் சாத்தான். தேவன் ஆதாமைப் படைத்து, ஏவாளுக்குக் காத்திருக்கச் செய்து, பின்னர் ஏவாளையும் கொடுத்து உடலுறவுக்குக் காத்திருக்கச் செய்ததுபோல, ஒவ்வொரு வாலிபனும் வாலிப சகோதரியும் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் சமையத்தில் வஞ்சிக்கப்பட்டவிடக்கூடாது. நம்மைப் படைத்தவர் தேவன் சாத்தான் அல்ல. படைத்தவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து காத்திருக்கும்போது, தேவ கட்டளைக்கு எதிராக படைப்புகளிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளக்கூடாது. தேவன் உடலைப் படைத்தவர், உறுப்பைப் படைத்தவர் ஆனால் உடலறவுக்கு மட்டும் பிசாசு பாடம் நடத்துவானோ. தேவன் செய்து வைத்ததை சீரழிப்பவனே சாத்தான்.

ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி 2:25). சத்துருவினால் வஞ்சிக்கப்பட்டு விலக்கப்பட்டிருந்த மரத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, தங்களை நிர்வாணிகளாகப் பார்க்கிறார்கள் (ஆதி 3:7); மாத்திரமல்ல தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்வதற்கு முன்பாக, ஒருவவரையொருவர் நிர்வாணிகள் என அறிந்து வெட்கப்பட்டு, அத்தி இலைகளைத் தைத்து தங்களது நிர்வாணத்தை மறைத்துக்கொள்கிறார்கள். வெட்கமாகப் பார்க்கும் உணர்வு அவர்களுக்குள் உண்டானது. அத்துடன், தேவனை நெருங்க தாங்கள் தகுதியானவர்கள் அல்ல (நாங்கள் பிசாசுக்கு கீழ்ப்படிந்துவிட்டோம்) என்ற பாவத்தின் வித்து அவர்கள் மனதில் ஆழமாக விழுந்தது, அதுவே தேவனிடமிருந்து அவர்களைப் பிரித்தது; ஏதேனிலிருந்து வெளியேற வழிவகுத்தது.

ஜீவ விருட்சத்தை தேவன் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் விலக்காதிருந்தபோதிலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைiயே சத்துரு அவர்களுக்குக் காட்டிக்கொடுத்தான். தேவனிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ளும் முன்னதாக, ஒருவருக்கொருவர் தங்களை மறைத்துக்கொள்ளுகின்றனர். சத்துருவின் சத்தத்திற்கு செவிகொடுத்து விழுந்துபோகாதிருந்தால் ஆதாம் ஏவாள் நிலை ஏதேனில் எப்படி இருந்திருக்கும் என்பதைக் குறித்து அறிந்துகொள்ள அல்ல, விழுந்துபோன அவர்களை மீட்கவே வேதம் எழுதப்பபட்டது.

நம்மை நிர்வாணிகளாகப் பார்க்கச் செய்யும் சத்துருவின் ஆலோசனைகள் இன்றும் உலகத்தில் ஏராளம். தேவனை விட்டுப் பிரிக்கும் காரியங்கள் ஏராளம்; இதற்கு உடலுறவின் தவறான போதனைகளுக்கு சத்துரு கொடுக்கிறான் முதலிடம். தவறான ச(க)திகளுக்குள் நாம் சிக்கிக்கொள்ளவேண்டாம்.

ஆதாம் ஏவாள் இருவருமாக இந்த உலகத்தை நிரப்பியிருக்கமுடியுமோ? அவனது பிள்ளைகள் தங்கள் சகோதரிகளையே அல்லது சகோதரர்களையே விவாகம் செய்துகொண்டால் ஒழிய சந்ததி தொடரமுடியாதே. எனவே, ஆரம்ப நாட்களில், மனித ஓட்டத்தின் தொடக்கத்தில், சகோதரர்கள் சகோதரிகளையே விவாகம் செய்யும் நிலையே காணப்பட்டது. காயீன் தன் மனைவியை அறிந்தான் (ஆதி 4:17) என்பதின் அர்த்தம், காயீன் ஆதாமுக்குப் பிறந்த சகோதரிகளில் யாராவது ஒருவரை விவாகம் செய்துகொண்டிருக்கவேண்டும்; ஆதாமுக்கு பல குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்திருந்தார்கள் (ஆதி 5:4). ஆனாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதியிலேயே மனித இனம் வாழ படைக்கப்பட்டது. ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே என மல் 2:15-ல் வாசிக்கிறோமே.

ஆதாமுக்கு இரண்டு துணையை அல்ல; ஒரு துணையையே தேவன் உண்டாக்கிக் கொடுத்தார். இரண்டு விலா எலும்புகளை எடுத்து இரண்டு ஏவாள்களை உருவாக்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தேவனது இந்த கோட்பாட்டினை மனித இனம் உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டது. ஆதி நாட்களில் அவ்வகை உறவினால் (ஆண், பெண்) மட்டுமே மனித இனம் பெருக முடியும் என்ற நிலை. அது தவறாக என்னப்படவில்லை. ஆபிரகாம் தனது தகப்பனுடைய குமாரத்தியை விவாகம் செய்திருந்தான். எனவே அவன்: அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள் (ஆதி 20:12) என்று சொல்லுகின்றான். என்றபோதிலும் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கை தேவன் கொடுத்தார். ஆனால், அதிகமாக ஆபிரகாம் ஆகாரை மறுமனையாட்டியாகச் சேர்த்துக்கொண்டபோது, தேவனால் அங்கீகரிக்கப்படாமல் துக்கங்களை அவன் சந்திக்கவேண்டியதாயிற்று. லாபான் தனது குமாரத்திகளான லேயாள் மற்றும் ராகேல் என்ற இருவரையும் யாக்கோபுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான் (ஆதி 29 அதிகாரம்). சகோதரிகள் மனைவிகள் ஆனபடியினால், அவர்களுக்கு இடையே போட்டியும் பொறாமையும் உண்டாயிற்று; யாக்கோபின் வாழ்வும் துக்கங்களைச் சந்தித்தது. ஆதி நாட்களில் மறுமனையாட்டிகளை தேவன் அனுமதித்தார் ஆனால் மதிக்கவில்லை. எழுநூறு மனையாட்டிகளும், முன்னூறு மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்த சாலமோன் வழுவிப்போனான் (1இராஜா 11:3). மிருகங்களைப்போல கண்ணில் படும் எந்த எதிர்பாலரையும் கண்டு அவர்கள் மேல் விருப்பம் கொள்ள முடியாது. உடலுறவு கொள்ள முடியாது; நாம் மனிதர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே.

ஆகாயத்துப் பட்சிகளைக் காட்டிலும், விலங்கினங்களைக் காட்டிலும் மனிதர்கள் விசேஷித்தவர்களாகப்; படைக்கப்பட்டிருந்தபோதிலும், தேவனால் மதிக்கப்பட்டிருந்தபோதிலும், மனிதன் தன்னை தேவன் பார்க்கும் நிலையில் வைத்துப் பார்க்கத் தவறிவிட்டான். இதனால் ஊடுருவிய சீர்கேடுகளினால் மனித இனம் கெட்டழிந்தது. மனிதர்கள் செய்த ஒருசில சீர்கேடுகளை வேதத்திலேயே நாம் காண முடியும்.

தகப்பனின் மறுமனையாட்டிகளோடே மகன்: ரூபன் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான் (ஆதி 35:22). முதற்பேரானவனாயிருந்தாலும், தனது சேஷ்டபுத்திர பாகத்தை இழந்துபோனான் (1 நாளா 5:1).

தகப்பனோடே மகள்கள்: நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா (ஆதி 19:32) என தனது தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து சயனித்தார்கள் லோத்துவின் மகள்கள்.

ஆணோடே ஆண்: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள் (ஆதி 19:5) சோதோமின் ஆண்கள். சோதோம் தேவனால் அழிக்கப்பட்டது.

மேலும், தன் தமையன் இறந்த பின்னர், தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் ஓனான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார் (ஆதி 38:9,10). தேவன் அவனை அழித்துப்போட்டார். 

மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள் (ஆமோ 2:7) என்ற நிலையும் ஜனத்தில் காணப்பட்டது.

வேசித்தனம்: யூதா தாசி என நினைத்து தனது மருமகளையே சேர்ந்தான் (ஆதி 38:16-18). தனது மாமனை திருத்தியதைப் போன்ற நிகழ்வு என்றாலும், அக்காலத்தில் வேசிகளும் வேசித்தனம் பண்ணுகிறவர்களும் இருந்திருக்கின்றனர் என்பதை இந்நிகழ்வு வெளிக்காட்டுகின்றதே.

என்றபோதிலும், தேவ நோக்கத்தை சித்தத்தை புரிந்து அறிந்து வாழ்ந்த குடும்பமும் இருந்தது. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் (ஆதி 6:9). மேற்கண்ட சீர்கேடுகளுக்கு நோவா தன்னையும், குடும்பத்தையும் விலக்கிக் காத்துக்கொண்டான். நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள் (ஆதி 7:13). நோவாவுக்கும் ஒரே ஒரு மனைவிதான், அப்படியே அவன் குமாரர்களும் ஒவ்வொருவரும் ஒரே ஒரு மனைவியையே கொண்டிருந்தார்கள்; எனவே அவன் நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் என வேதம் சொல்லுகின்றது. எகிப்தில், யோசேப்பினுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி (ஆதி 39:7) என்றபோது, அது தேவனுக்குப் பிரியமில்லாத செயல் என்பதை அவன் அறிந்திருந்தானே.


கட்டிப்போட்ட சட்டங்கள்

கண்டுகொள்ளாத மனிதர்களும்


இப்படியான உலக மனிதனின் பல நிகழ்வுகளால் தேவன் துக்கமடைந்தார். ஆனால், ஆறறிவு படைத்த மனிதனோ தேவன் கொடுத்த உடலுறவில் எல்லையினை மீறி தகப்பனோடு, தாயோடு, ஒருவன் பலரோடு, ஒருத்தி பலரோடு என்றும், ஆணோடு ஆண் என தாறுமாறாகத் உடலுறவினைத் தொடங்கியபோது தேவன் அதற்கான சட்டத்தை ஏற்றவேண்டியதாயிற்று. இந்தச் சட்டத்தின்போது, ஆதியில் சகோதரியுடன் விவாகம் செய்தால் மட்டுமே சந்ததி பெருகும் என்ற சூழ்நிலையின் சுதந்திரமும் அறுக்கப்பட்டது. மனிதனுக்கான பல்வேறு சட்டதிட்டங்களை தேவன் மோசேயினிடத்தில் சொல்லும்படியாக் கற்பித்தபோது, உடலுறவைக் குறித்ததான சட்டமும் அதில் முக்கிய இடம் பெறுகின்றது. கீழ்க்கண்டவைகளே அச்சட்டங்கள்.

உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:7), 

உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:8), 

உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:9), 

உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:10), 

உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:11). 

உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:12), 

உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:13), 

உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:14), 

உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:15), 

உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:16), 

ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது (லேவி 18:17), 

உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது (லேவி 18:18), 

பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம் (லேவி 18:20), 

மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது (லேவி 18:23), 

பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது (லேவி 18:22) என்று வரையறை கொடுக்கப்பட்டது மனிதனின் உடலுறவுக்கு.

என்றபோதிலும், கீழ்ப்படியாத மனித இனத்தால் இடையில் தேவனால் வந்த தடையினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இத்தனை சட்டதிட்டங்களுக்கு மத்தியிலும், அம்னோன் தன் சகோதரியாகிய தாமரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய அம்னோன் முயன்றான் (2சாமு 13:2). அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே; இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம் (2சாமு 13:12) என அவனைக் கெஞ்சிக்கொண்டபோதிலும், அவனது ஆசை அடங்காதுபோயிற்று. அவளது அழகை அனுபவிக்கவேண்டும் என்ற வேட்கை அவனுக்கு. இறுதியில் சகோதரியின் மேலேயே பாய்ந்து அவளைக் கெடுத்துப்போட்டான் அம்னோன். சகோதரன்தானே, சகோதரிதானே, அக்கா வயதுதானே, தங்கச்சி மாதிரிதானே இருகிறாள் என நினைத்து பழகுபவர்களே ஜாக்கிரதை. ஆண் பெண் இருவரும் வயதை அடைந்தவர்களாக இருந்தால் வரையறை தேவை. திருமணம் முடிந்த பெண்தானே என்ற பழக்கமும்கூட மாற்றான் மனைவியைத் திருடிவிட வழிசெய்துவிடும் எச்சரிக்கை.

தனது தகப்பனுடைய மனைவியின்மேல் ஆசைவைத்தான் அதோனியா (தாவீது அவளை அறியவில்லை என்றாலும் அவளது மனைவியாகவே பாவிக்கப்பட்டவள்) (1இரா 2:17). பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் நிருபத்தில், உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே (1கொரி 5:1) என்று எழுதுகிறாரே. இன்றைய நாட்களிலும், இத்தகைய பாவங்கள் உலகத்தில் பெருகிவருகின்றன.

திருமணமாகும் வரை பெற்றோர் என்ற எல்லை ஒவ்வொரு வாலிபப் பெண்ணுக்கும், பையனுக்கும் உண்டு. ஒருவருக்கொருவர் விருப்பங்கொண்டு பெற்றோரின் எல்லையினைத் தாண்டி அது தீர்மாணிக்கப்படக்கூடாது. உலக சட்ட திட்டங்கள் அப்படியல்ல. இந்தியாவில், ஒரு வாலிபன் 18 வயதினை நிரம்பியிருந்தால், ஒரு வாலிபப் பெண் 21 வயதினை நிரம்பியிருந்தால், அவர்கள் இருவரும் சுயமாக திருமணம் செய்து கொள்ள சட்டம் ஒத்துக்கொள்கிறது; காவல் நிலையங்களும், திருமண பதிவு அலுவலகங்களும் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நெருப்பும், பஞ்சும் சேர்ந்து பெற்றோர்களைப் பற்றவைக்கக்கூடாது, பெற்றோர்கள் நெருப்பையும் பஞ்சையும் சேர்த்து பற்றவைக்கட்டும் (திருமணம் முடித்துவைக்கட்டும்).

தகப்பனுக்கும் மகளுக்கும், சகோதரனுக்கும் சகோதரிக்கும், தாய்க்கும் மகனுக்கும் என எந்த ஓர் கட்டுப்பாடும் இன்றி, உடலுறவை ஊதாரித்தனமாக்கிவிட்டது உலகு. தகப்பனானாலும், சகோதரனானாலும் எல்லைக்கோடு என்பது கட்டாயம் வரையப்பட்டிருக்கவேண்டும், உடன் பிறந்த சகோதரன் என்றபோதிலும் அவன் ஆண் என்பதால் உடலுறவு ஒத்துக்கொள்ளும். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், உடலுறவுக்கு ஒன்றுமே இல்லை; எனவே சகோதரர்கள் சகோதரிகள் என உங்களை நீங்களே ஏய்த்துக்கொண்டும் உலகத்தை ஏமாற்றிக்கொண்டும் அலைந்துவிடவேண்டாம்.

1999-ம் ஆண்டு நான் ஓரிடத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, நாளிதளில் வந்த செய்தி இது. சென்னையிலுள்ள ஓர் நடுத்தர குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். அண்ணன் மற்றும் தங்கை. இரண்டு பிள்ளைகளுக்கும் இடையே இரண்டு வயது வித்தியாசம். தங்கை திருமண வயதினை எட்டிய போது, அவளது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க முயற்சித்து, அவளிடம் கேட்டபோது, 'இப்போது வேண்டாம், இப்போது வேண்டாம்' என காலந் தாழ்த்திக்கொண்டே வந்தாள். யாராவது உனக்கு விருப்பமானவர்கள் இருக்கிறார்களா என்றபோதிலும் பெற்றோரிடத்தில் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. திடீரென அண்ணன் தங்கை இருவரும் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார்கள். அண்ணன் வேலை செய்த கம்பெனியில் இரண்டு வாரம் விடுப்பு பெற்றிருப்பது விசாரித்ததில் தெரியவந்தது. பெற்றோர்கள் உறவினர் வீடுகள் எங்கும் தேடியும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. வாலிபப் பிள்ளைகள் சொல்லாமல் சென்றுவிட்டதை நினைத்து நொந்துபோயிருந்தனர் பெற்றோர். அப்போது, அண்ணனும் தங்கையும் இருவரும் திருமணம் செய்துகொண்ட செய்தியினை தொலைபேசியில் தெரிவித்தனர்; அசிங்கமாகிவிட்டதே என அதிர்ச்சியடைந்தனர் பெற்றோர். பலவிதமானவர்களின் ஆலோசனைகளும் அவர்களுக்கு அபத்தமாகவே தோன்றியது. அண்ணனைப் பிரிந்து என்னால் இனி வாழ முடியாது என்றாள் தங்கை, அதே பதில் அண்ணனிடமிருந்தும் வந்தது. இருவரையும் வீட்டை விட்டு விலக்கி வைத்தனர்; ஆனால் அண்ணனும் தங்கையும் குடும்பமாக வாழத்தொடங்கினர்.

அப்படியே, குடி போதையில் வந்து, மகளை மனைவி என கண் சொருகிப்பார்த்து, வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு. போதை தெளிந்தபோது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த தகப்பனும் வெளிநாடுகளில் உண்டு. மகள் தற்கொலை செய்துகொண்டாள் என மறைத்தாலும், மருத்துவம் அவளது தந்தைக்கு சாவு மணி அடித்தது.

தனது மனைவியை நண்பர்களுக்குத் தாரை வார்த்த கணவர்கள் உண்டு, தனது மகளுடனேயே நெடுநாளாய் உடலுறவு வைத்திருந்த தந்தை இந்தியாவில் கைது செய்யப்பட்டதுண்டு. தனது மகளை கற்பழித்துக் கொன்றுவிட்ட தந்தையும் உண்டு. இவர்களெல்லாம் காமத்தைச் சுவைப்பதற்காகக் கண்களைக் குருடாக்கிக்கொண்டவர்கள்.


புணர்ச்சியாகும் சுய உணர்ச்சி


குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தை தொடும்போது, பல உணர்வுகளும் வாழ்க்கையில் கூடுகின்றன. சரீரம் மட்டுமல்ல, சரீரத்தின் உள் உறுப்புகளிலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன. பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகுதல், குரல்களில் மாறுமாடு என சிறுமிகள் வாலிபப் பருவத்தினைத் தொடும்போது, தாயாகும் தன்மைக்குள் நுழைகிறார்கள் (ஊழஅiபெ ழக யபந ளை ய லழரபெ pநசளழn'ள வசயளெவைழைn கசழஅ உhடைனாழழன வழ யனரடவாழழன). இது இயற்கையாகவே சரீரத்தில் நிகழும் ஒன்று; இது சரீரத்தின் வளர்ச்சி; இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் காணப்படுவது விகர்ப்பமானது அல்ல வழக்கமானது. வாழ்க்கைச் சூழலைப் பொருத்து வயது வரும் காலம் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஒரே வயதை உடையவர்கள் ஒரே நேரத்தில் இப்பருவத்தினை அடையவேண்டும் என்றல்ல. தனது தோழி இப்பருவத்தினை அடைந்துவிட்டாளே என குற்ற மனம் கொள்ளத் தேவையில்லை. குறிப்பிட்ட வயதுவரும் வரை இந்நிலையினை அடையவில்லை என்றால், மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனையினைப் பெறவேண்டும். இப்பருவத்தினை அடையும்போது, வாலிபத்தின் வயதில் பல ஹார்மோன் சுரப்பிகள் உடலில் செயல்படத் தொடங்குகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நேரத்தில் பெண்களுக்கு மாதவிடாய் வரத்தொடங்குகின்றது.

இப்பருவத்தில் கேட்பவைகளையும், காண்பவைகளையும் மற்றும் பழகுபவர்களையும் குறித்து மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இவைகளிலேயே வாலிபத்தினைத் திசை திருப்ப சத்துரு சதியினைப் பயன்படுத்துகிறான். சிறுபிள்ளையின் தன்மை வேறு வாலிபத்தின் தன்மை வேறு. சிறுகன்று பயமறியாது; ஆனால், வாலிபத்தின் பருவத்தை அறிந்துகொள்ளவேண்டும். உலகப்பிரகாரமாக, பெண்கள் பருவமடையும்போது கிராமங்களில் மற்றும் சில பகுதிகளில் அதனை விழா எடுக்கின்றனர். பாவாடை சட்டையிலிருந்து, அரைத்தாவணிக்கு மாறுவார்கள் பெண்கள்; வித்தியாசம் தெரியத்தொடங்கும். இப்பருவத்தின் வாழ்க்கை முறை முக்கியமானது. சிறுவர்களாக இருந்தபோது எதிர்பாலினருடன் பழகியவாறே இப்பருவத்தின்போதும் பழகலாகாது.சரீரத்தின் உணர்வுகள் வாழ்க்கையை உடைத்துவிட வாய்ப்புகள் உண்டு.

வாலிபத்தின் பருவத்தில் வாழ்க்கையின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மறக்கப்பட்டுவிடக்கூடாது. இப்பருவத்தில் உண்டாகும் உணர்வுகள் சற்று வித்தியாசமானவைகள். எதிர்பாலருடன் ஈர்ப்புத்தன்மையை உடல் தானே பெற்றிருக்கும் பருவம் இது. எனவே, நாம் காண்பவைகள், நாம் அதிக நேரம் செலவழிப்பவைகளால் நமது வாழ்வு வடிவமைக்கப்படும். வாலிபப் பருவத்தினை அடைந்தவுடனேயே உடலுறவின் உணர்ச்சி உண்டாகிவிடுகிறது. அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கத் தவறிவிட்டால் வாழ்க்கைக் கட்டிடமே இடிந்துவிடும்.

எனவே, உணர்வு மிக்க நமது அங்கங்களை நாம் தொடும்போதுகூட உணர்விலிருந்து சத்துரு நம்மைப் புணர்வுக்குள் தள்ளிவிடுவான் ஜாக்கிரதை. சுயபுணர்ச்சி நானாக செய்துகொள்வதுதானே, இது யாரையும் பாதிப்பதில்லையே; என்னை நானே மகிழ்வித்துக்கொள்கிறேன் அவ்வளவுதானே என்ற நினைவு பலருக்கு. நமது சரீரம் தேவனது ஆலயம் என்பதை மறந்துவிடவேண்டாம். நாம் எதைச் செய்தாலும், அது நமது சரீரத்தில் அல்ல தேவனுடைய ஆலயத்தில் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். திருமணத்திற்கு முன் உணர்வுகளைத் தீர்த்துவிட அத்தனை உபாயத்தந்திரங்களையும் செய்வான் சத்துரு. இதற்கு இசைந்துபோனால், உணர்வு புணர்வாகி திருமணத்திற்குப் பின்னர் உணர்விழக்கும் நிலை உருவாகும்.

ஆணோ அல்லது பெண்ணோ தனது பிறப்பு உறுப்பைத் தொடும்போது உணர்வு மட்டுமல்ல, சுகமும் உண்டு இது மறுப்பதற்கல்ல. அது அது வாலிபத்தில் அனுபவிப்பதற்கல்ல. திருமணத்தின்போது பருகவேண்டிய தேனீர். தனியறையில் இருக்கும்போதும், குளியலறை செல்லும்போதும் இவ்வித உணர்ச்சியை புணச்சியாக்கிவிடக்கூடாது. சுயபுணர்ச்சிக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்களை அது ஆளுகிறது. சுயபுணர்ச்சி பலவிதமான தீமைகளை நமது வாழ்வில் உண்டாக்குகின்றது. நம்மைத் தனிமைப்படுத்துகின்றது, மறைவாக வாழப் படிப்பிக்கின்றது. நம்மை நாமே மகிழ்வித்துக்கொண்டாலும், அது தேவனுடைய ஆலயத்தில் நடக்கும் தீமை. திருமணத்தின்போது உண்டாகக்கூடிய உடலுறவின் ஆசையினைத் தீர்த்துக்கொண்டது போன்ற பொய்யான ஒரு பிரம்மையை இது கொடுக்கின்றது. இதற்கு அடிமைப்பட்டுக் கிடப்போர் ஏராளம் ஏராளம். உலக பத்திரிக்கைகளில் வரும் அரைநிர்வாண கிளர்ச்சியூட்டும் பெண்களின் படங்கள், சினிமாக்கள் சுயபுணர்ச்சியினைத் தூண்டிவிடுபவைகள்.

மருத்துவ உலகம் சுயபுணர்ச்சியைத் தவறு எனச் சொல்லவில்லை; அதிகம் செய்தால் தவறு என்றுதான் சொல்கிறது. ஆனால், மனிதர்கள் அதனைச் செய்தாலே தவறு என்பது வேதத்தின் நிலை. மருத்துவத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் வித்தியாசம் உண்டு. மருத்துவம் மனிதன் மரிக்கும்வரை செய்யப்படுவது, கிறிஸ்தவம் அதனையும் தாண்டிச் செல்வது. 2010 ம் ஆண்டின் ஓர் கணக்கெடுப்பின்படி 87 சதவீத பெண்களும், 95 சதவீத ஆண்களும் சுயபுணர்ச்சி செய்பவர்கள் எனக் கூறுகிறது. உடலில் மற்றும் மூளையில் கடுமையான மாற்றங்களை உண்டாக்கக்கூடியது. நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மையின்மையினையும் விளைவிக்கும் இப்பழக்கம். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார் என்பதை நினைவில் கொள்ளவும். தனி வாழ்வில் மட்டுமல்ல, திருமண வாழ்விலும் இதனால் உண்டாகும் பாதிப்புகள் உண்டு. தானாக விந்து வெளியேறினால் அது இயற்கையாய் உடலில் நடைபெறும் நிகழ்வு, ஆனால் ஆணாக அதனை வெளியேற்றக்கூடாது.

ஒரு வாலிபன் சுயபுணர்ச்சி எனும் இப்பாவத்திற்கு அடிமைப்பட்டிருந்தான். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கிறிஸ்துவை இரட்சகராக ருசிக்காத அவன் தனது வாலிப நாட்களில் அப்பாவத்தின் சிற்றின்பத்தில் சற்று சுகம் கண்டதால், மீண்டும் மீண்டும் விழுந்தான்; பின்போ அவனால் எழுந்திருக்கவே முடியாமல் போயிற்று. தனிமையான பல நேரங்களில் அவனைக் கறைப்படுத்திக்கொண்டேயிருந்தான். சிற்றின்பம் இருந்தபோதிலும் அதனைச் செய்துமுடித்தபோது, சற்று சோர்வடைந்து குற்றத்திற்குள்ளானவனாக தன்னையே நினைக்கும் இறைவன் கொடுத்த மனசாட்சி அவனுக்குள் கிரியை செய்தது. வேண்டாம் என வெறுத்தாலும், அவ்வப்போது, அம்மாவாசையைப்போல பௌர்ணமியைப்போல அவனது படகு கவிழ்ந்தது. இந்நிலையில், கிறிஸ்துவின் சிலுவை அன்பிற்கு தன்னை ஒப்புக்கொடுத்தான்; பழைய பாவங்களைக் களைந்து வாழத் தொடங்கினான். களைந்து எரிந்துவிட்ட அவனது பழைய வாழ்க்கையின் பல பாவங்கள் மீண்டும் தலை தூக்காது தரையில் கிடந்தன.

ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவன் என சுற்றம் பற்றத்தில் வாழ்வோரால் அடையாளம் காட்டப்பட்டும் விட்டான் அவன். பிரசங்க மேடைகளும் அவனைத் தேடிவந்தன. தந்தவரின் தாலந்தினால் தெருவில் உள்ள மற்றோரும் கிறிஸ்துவின் அன்பினை ருசிக்கவைத்தான் அவன். பல்வேறு ஊழியங்களில் இணைந்து செயல்படத் தொடங்கினான் அவன். கிறிஸ்துவுக்காகச் செயல்படும் அவனது வேகம் நடையாயல்ல ஓட்டமாயிருந்தது. என்றபோதிலும், குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் 'சுயபுணர்ச்சி' என்ற இப்பாவம் அவனைத் தொற்றிக்கொண்டது. தனது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆரம்பத்தில் காட்டிய அக்கறையையும், கவனத்தையும் விட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையில் களைப்படைந்து இளைப்பாறிக்கொண்டிருந்ததின் விளையாய் மீண்டும் சுயபுணர்ச்சி என்னும் களை அவனது வாழ்வில் முளைத்தது.

இரட்சிப்படைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர். முதன் முறையாக இந்தப் பாவத்தைச் செய்ததினால் அவனது ஆவி மாம்சத்தோடு சண்டைபோட்டது. குற்ற உணர்வு அவனது வாழ்வில் கூடத்தொடங்கியது. எனது ஆவிக்குரிய வாழ்க்கையினை நானே தற்கொலை செய்துகொண்டேனே என்ற எண்ணம். விழுந்தாலும் மீண்டும் சுயபுணர்ச்சியிலிருந்து விடுபட்டு முன்னிருந்த இரட்சிப்பின் சந்தோஷத்தோடு வாழவேண்டும் என விரும்பினான். அவனது விருப்பத்தை எல்லாம் தொடர்ந்து வந்த பல மாதங்களின் மேலும் பல வீழ்ச்சிகள் நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டன. விடுபடாமல் வாழத் தொடங்கினான். வெளி உலகில் அவனுக்கு இருந்த அடையாளங்கள் அழியவில்லை. தன்னை அழித்துக்கொண்டே தேவனுக்காச் செயல்படும் அளவிற்கு சத்துரு அவனை முன்னேற்றிவிட்டான். பிரசங்கம் செய்வதிலும், இயேசு பாவத்திலிருந்து விடுதலை கொடுக்கிறவர் என்பதைச் சொல்லவும் பிரசங்கியார் என்ற ஸ்தானத்தினால் அவன் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருந்தான்.

அவனது வாழ்க்கையினால் துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தார் பரிசுத்த ஆவியானவர். எல்லாரும் என்னைப் போலத்தான் இருப்பார்களா? என்ற எண்ணம் ஒருபுறம். மறுபுறம் இரண்டு ஆண்டுகள் இல்லாத இப்பாவம் இப்பொது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என தலை தூக்கத் தொடங்கிவிட்டதே என்ற எண்ணம். சிந்தனைகள் ஆயிரம் வந்தாலும் சிதைவுகளிலிருந்து அவன் தன்னைக் காத்துக்கொள்ள இயலாமல்; ஆவிக்குரிய வாழ்க்கையில் இறந்துகிடந்தான். வேதம் கையிலே வாழ்க்கை பிசாசின் கையிலே. தப்பான வழியில் செல்கிறோம் என்ற உணர்வு இருந்ததால் அப்பா எனக் ஜெபிக்கவும், உதவியுங்கூட கோரவில்லை. உயிருள்ளவன் என பெயர்கொண்டிருந்து செத்தவனாயிருந்தான். ஊழியம் செய்ய விருப்பம் இல்லாமற் போனாலும், ஊழியம் செய்யாமல் அவனால் இருக்கமுடியாத நிலை.

சுயபுணர்ச்சி என்ற பாவத்தைச் செய்யும்போதெல்லாம் துக்கமடையும் அவனது மனம். ஆரம்பத்தில் ஆனந்தம் அந்தத்தில் அந்தகாரம் இது தான் அப்பாவத்திலிருந்த அவனது நிலை. இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாமற்போனதால் அவதிப்பட்டான். மீண்டும் நான் இரட்சிக்கப்படவேண்டுமா, மீண்டும் ஞானஸ்நானம் எடுக்கவேண்டுமா என்ற கேள்வி அவனது உள்ளத்தில் உதித்தது; இக்கேள்வியினை வெளிப்படையாக ஊழியரிடத்தில் கேட்க அஞ்சினான். வழி அறியாத அவன், சுயபுணர்ச்சி செய்யும்போதெல்லாம் குற்ற உணர்வடைந்து, 'ஆண்டவரே இனி நான் இதை செய்யமாட்டேன், இதுதான் கடைசி முறை' என தனது நாட்குறிப்பேட்டில் எழுதிவைத்து, ஜெபித்து குளியலறைக்குச் சென்று ஒரு வாழியில் தண்ணீரை எடுத்து அதனை ஜெபித்து மீண்டும் ஞானஸ்நானம் பெறுவதாக நினைத்து அதனை தன்மேலே ஊற்றிக்கொள்ளுவான். இரட்சிப்பின் சந்தோஷம் உனக்குள்ளேதான் இருக்கிறது, பாவத்தை அகற்றிவிடு அப்போது இரட்சிப்பின் சந்தோஷம் ஆனந்தம் தரும், மறுமுறை ஞானஸ்நானம் பெறவேண்டிய அவசியமில்லை என அவனுக்குக் கற்றுக்கொடுக்க யாருமில்லாததினால் அவனது மூளையில் உதித்த தவளான முடிவுகள் இவைகள். அப்பாவத்தில் அவன் வீழ்ந்த கிடந்த நான்கு மாதங்களில் எடுத் ஞானஸ்நானங்கள் அவனது குற்றமனதைத் திருப்திபடுத்தவே அவன் செய்துகொண்டதுதான்.

இந்தச் சூழ்நிலையில் 'மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26)' என்ற வசனம் அவனோடு பேசியது. மேலும், நான் உன்னை விடுவித்துவிட்டேன், வெளியே வரவேண்டியது நீதான் என்று கர்த்தர் அவனோடு இடைபட்டார். இரட்சிக்கப்பட்ட வாலிபனால் பாவம் செய்ய முடியாது என்றல்ல இரட்சிக்கப்பட்ட வாலிபன் பாவம் செய்யச்கூடாது என்ற கற்பனைக்குக் கீழ்ப்படிந்தான். இது சாத்தியமா, செத்துப்போன என்னால் இனி சாகசம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை அவனது மனது கேட்டுக்கொண்டிருந்தபோது நடந்தது தேவனால் அவன் முன்னே ஓர் செயல். தேரியில் ஓர் பனை மரத்தடியில் இத்தனை சிந்தனைகளுடன், தான் செத்துவிட்டதாக தானே நினைத்து புலம்பிக்கொண்டிருந்த அந்த வாலிபனை, தேவனின் அந்த செயல் உயிரடையப்பண்ணியது. அவன் அங்கு வந்தமர்ந்தபோது அவனுக்கு முன்னே தரையிலே படர்ந்திருக்கும் ஒரு சில இலைகளையுடடைய புல் செடி இருந்தது; அதனை அவன் பார்த்திருந்தான். இந்த நீண்ட நேர சிந்தனைக்குப் பின்னர் அது நினைவில் வர, கீழே பார்த்தான் அந்தப் புல் செடியினைக் காணவில்லை, அவனும் அந்த இடத்தை விட்டு சற்றும் நகர்ந்திருக்கவில்லை.

இதை எண்ணிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு காற்று வீசியது; அது அவனுக்குக் கற்றுக்கொடுக்கவே. காற்றிலே மண்ணும் பறந்துவருதால், கண்ணைக் காப்பாற்ற மூடிக்கொண்டான். காற்று அமர்ந்ததும், கண்களைத் திறந்த அவனுக்கு எதிரே அந்தச் சில இலைகளையுடைய புல் தெரிந்தது. அவனுக்கு தேவன் கற்றுக்கொடுக்கவேண்டிய பாடம் காற்றடித்ததும் முடிந்தது. இந்த சில இலைகளையுடைய புல்லைப் போன்றது உனது இரட்சிப்பு, அதற்கு மேல் நீதான் சுயபுணர்ச்சி என்னும் மண்ணை அள்ளிப்போட்டு அதனை (இரட்சிப்பின் சந்தோஷத்தை) மறைத்துவிட்டாய்; சாத்தான் இரட்சிப்பின் சந்தோஷத்தை நீ மறக்கும் அளவிற்கும் நீ தள்ளப்பட்டுவிட்டாய். நீ மேலே போட்ட மண்ணை நீயே ஊதிவிட்டால் அது போய்விடும் என்ற பாடமே அது. இந்த சத்தியம் சாத்தியமாகுமா என சந்தேகப்படும்போது, 'மனுஷரால் கூடாததுதான் தேவன் கூட இருந்தால் கூடும்' என்று அவனது எண்ணத்தில் உதித்த வார்த்தை, சந்தேகம் என்னும் சமாதியிலிருந்தும், சுயபுணர்ச்சி என்ற சவத்திலிருந்தும் அவனை உயிரோடுகூட எழும்பி தேவனுக்காக மேலே நிற்கச் செய்தது. தன்னைப்போன்று வீழ்ந்திருப்போரை குற்றவாளியாகக் கருதாமல், தான் கற்றதினால் அவர்களை சுயபுணர்ச்சி என்ற கல்லறையிலிருந்து உயிரோடே எழுப்பும் ஊழியம் அவனுடையதாயிற்று; தான் கஷ்டப்பட்டதினால், அத்தகைய பாவத்திலிருக்கும் வாலிபரை குற்றவாளிகளாக, பாவிகளாக, ஒதுக்கப்படவேண்டியவர்களாகக் காணாமல், அதனின்று அவர்களை விடுவித்து கர்த்தரண்டை நடத்த கண்ணீர் வடிக்கின்றது அவனது கண்கள்.

இரட்சிப்பு என்பது ஓர் இனிப்பு. அதன்மேல் உலகத்தின் எறும்புகள் ஏறும்போது இனிப்பு வேண்டாம் என்று முடிவெடுக்கவேண்டாம். எறும்புடைய அந்த இனிப்பு நெருப்பாகிய தேவனண்டை நெருங்கிக்கொண்டே சென்றால், எறும்புகளுக்கு இறப்பு வரும் அல்லது இறங்கிச் செல்லும். குற்ற உணர்வடையும் பல வாலிபர்கள் முதலில் செய்வது தங்களைத் தேவனிடமிருந்து பிரித்துக்கொள்வதுதான். நான் இந்தப் பாவத்தைச் செய்தவிட்டேன். இனி கூடுகைக்கோ, ஊழியத்திற்கோ செல்ல, வேதம் வாசிக்க, ஜெபிக்க நான் தகுதியுடையவன் அல்ல என்ற எண்ணத்தை பிசாசு அவர்கள் மனதில் பிரதானமாக்கி பிரிவினையைப் பெரிதாக்கிவிடுகிறான். நமக்கும் தேவனுக்கும் உண்டாகும் பிரிவினைகளுக்காக சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்தவரே இயேசு. அவர் இன்றும் தேவனிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1யோ 2:1). நாம் மரிக்கும் வரை அல்லது, இயேசு மீண்டும் வரை அவ்வளவுதான் கால அவகாசம். அதுவரை, 'ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்' (லூக்13:8) என்று இயேசு நமக்காகப் பரிந்துபேசலாம். கனி கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்ற நியாயத்தீர்ப்பு இறுதியானது (லூக் 13:8-9). அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (1கொரி 6:9-10).

உணர்ச்சியைத் தூண்டும் புகைப்படங்கள், சினிமாக்களைப் பார்ப்பதால் உணர்வுகள் மேலோங்குகிறது; அதனை அடக்கக்கூடாதுபோகின்றது; இறுதியில் அதற்கு அடங்கும் நிலை உண்டாகிவிடுகிறது. இவைகளைத் தவிர்க்கவேண்டும். தனியறையில் வேலை ஏதும் இன்றி உறங்காமல், சும்மா படுத்துக்கிடப்பது. நாளிதல்களில் வெளியாகும் திரைப்படங்களின் விளம்பரங்கள், தேவையற்ற புத்தகங்களைப் படிப்பதுதால் உணர்வுகள் வெடிக்கும். தனது உடலைத் தானே ரசித்து ரசித்து பார்க்கும் குணம். திருமணத்தில், மனைவியோடு கொள்ளும் உறவின் பிரம்மையை தற்காலிகமாக உண்டாக்குவதே சுயபுணர்ச்சி. இவ்வுணர்ச்சி தவறல்ல இப்புணர்ச்சி தவறு.


ஒத்துக்கொள்ளப்படாத 

ஓரினச் சேர்க்கை



இன்றைய நாட்களில் உலகத்தின் பார்வையில ஓரினச் சேர்க்கையும், ஓரினத் திருமணங்களும் ஒத்துக்கொள்ளப்படுகின்றன. சுயபுணர்ச்சியில் சிக்கியிருக்கும் வாலிபர்கள் ஆண்புணர்ச்சி என்னும் அடுத்து ஓர் வலையில் வழுக்கி விழும் ஆபத்தும் உண்டு. இதுவும், பாலுறவின் அடுத்தக் கட்டமாக சத்துரு கொடுக்கும் பிரம்மையான புணர்வு. வாலிபத்தின் உணர்ச்சியை ஆண்புணர்ச்சி அல்லது பெண்புணர்ச்சியாக்கும் சத்துருவின் சதிக்குள்ளும் அகப்பட்டுக்கிடக்கிறது ஒரு கூட்டம். ஆண் பெண் உடலுறவு தேவனால் கொடுக்கப்பட்டது (திருமணத்திற்குப் பின்). ஆனால், ஆணோடு ஆணோ அல்லது பெண்ணோடு பெண்ணோ உடலுறவு கொள்வது அவலட்சணமானது. பெண்ணுக்குப் பதிலாக ஆணையே பெண்ணாகக் கற்பனை செய்துகொண்டு, அல்லது பெண்ணையே ஆணாகக் கற்பனை செய்துகொண்டு ஒருவருக்கொருவர் தங்களைத் தாங்களே மகிழ்வித்துக்கொள்வது முரணானது. இதனை திருமணமாகவும் அங்கீகரித்துக்கொண்டன சில நாடுகள்; கிறிஸ்தவ ஆலயங்களில் கூட இத்தகைய திருமணங்கள் நடத்திவைக்கப்படுகின்றன; எத்தனை கேவலம். பெண்ணோடு பெண் அல்லது ஆணோடு ஆண் பழகும்போதும் வரையரை தேவை எல்லைக்கோடு தேவை.

ஆண்புணர்ச்சியில் வாலிபர்களை சிக்கவைக்கும் ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்; அத்துடன், ஆண்புணர்ச்சியில் விழப்போகும் தனது நிலையினையும் நீ அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். எந்த ஒரு வாலிபனின் தோற்றத்தைக் கண்டு மாத்திரம் நீ ஈர்க்கப்படத்தொடங்கிவிட்டால், இது காதலைப்போன்று உன் கால்களைச் சிக்கவைக்கும் வலைதான். நண்பர்களாகப் பழகுவதை நான் குற்றம் சொல்லவில்லை, சுத்தமாக பாவிக்கப்பட்டுவரும் நட்பையும் நான் கொச்சைப்படுத்தவில்லை. நண்பர்கள் ஒரே வயதுடையவர்களாக இருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குறைவு. ஆனால், உன்னைக் காட்டிலும் சற்று வயது குறைந்த வாலிபர்களுடன் (ஆண்,பெண்) பழகும்போது கவனம் தேவை. யாரோ ஒருவனையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற நிலை உண்டாகிவிட்டால், 'ஒரு வாலிபனை இச்சையோடு பார்க்கிற எவனும் அவனோடு ஓரினச் சேர்க்கை செய்தாயிற்று' என்று நான் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

ஊழியம் செய்வோர் பலரும், உயர்ந்தோராய் கருதப்படும் பெரியோரும் கூட இத்தகைய பாவத்தில் சிக்குண்டு கிடக்கிறார்கள் என உலகச் செய்தித்தாள்களில் வாசிப்பதை நினைக்கும்போது மனம் பதைக்கிறது. திருமணம் முடித்து ஊழியத்தில் இருக்கும் அவர்களையும் தன் வசத்தில் வைத்திருக்க பெலமுள்ள இப்பாவம் எத்தனைக் கொடியது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இது தேவ தூதர்களையே தன்வசம் ஈர்க்க நினைத்த பாவம் அல்லவா.

சோதாம் தேசத்து மனிதர்கள் லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்று (ஆதி 19:5) அவர்கள் துதர்கள் தங்கியிருந்த லோத்துவின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு கூக்குரலிட்டபோது, லோத்து அவர்களை நோக்கி: இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான் (ஆதி 19:8) எனினும் ஆண்புணர்ச்சியில் சிக்கிக்கிடந்த அவர்கள், எங்களுக்கு பெண் அல்ல வீட்டிற்குள் இருக்கும் ஆண்தான் தேவை என கொக்கரித்து, லோத்துவை நோக்கி 'பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்'(ஆதி 19:9).

ஆண்புணர்ச்சிக்காரர்களின் நிலையினைப் பாருங்கள்; எத்தனை வேதனை எத்தனை கொடுமை. இறைவன் உறவுக்கென்று படைத்துக்கொடுத்த ஸ்திரீயின் மேலுள்ள ஆசையைக் கூட அகற்றிவிட்டது. எனவேதான், இப்படிப்பட்ட பாவத்தில் விழுந்து கிடப்போர் பலரின் குடும்பங்கள் இன்று இடிந்துகிடக்கின்றன.

மற்றொரு பிரிவினரும் தற்போது உலகத்தில் பெருகிவருகின்றனர். ஆணாகப் பிறந்தவர்கள் தங்களைப் பெண்களாக மாற்றிக்கொள்கின்றனர்; இது தவறான ஒன்று. அப்படி பெண்களாக மாற பல ஆயிரங்களைச் செலவழித்து விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தி ஒன்றினை வாசித்தேன்; இரண்டு நண்பர்கள் (ஆண்கள்) திருமணம் செய்துகொள்ள விரும்பி, அவர்களில் ஒருவர் மருத்துவ முறையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொண்டார் என்று. இது ஓரினச் சேர்க்கைதான். ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ நீ பிறக்கவில்லை அவர் படைத்திருக்கிறார். படைத்தவர் தவறு செய்யவில்லை; படைப்பினை மாற்றி மனிதர்கள் தவறு செய்கின்றனர்.

நான் இந்தக் கட்டுரையினை எழுத்திக்கொண்டிருக்கும் அன்று ஓர் மாதாந்திர இதழில் வாசித்தச் செய்தி என்னைத் திடுக்கிடச் செய்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஓரினச் சேர்க்கை குழுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்; அநேகர் அதில் ஈடுபடுகின்றனர் என்ற செய்திதான் அது. 



விபச்சாரம்


இவைகளையும் தாண்டி, இனி மீதமிருப்பது எதிர்பாலர்கள்தான். எனவே அடுத்த கட்டமாக கண்கள் பாய்வது எதிர்பாலரின் மேலேயே. எதிர்பாலருடன் பழகுவதில் இப்பருவத்தில் அதிக கவனம் தேவை. சாதாரணமாகப் பேசுவதுபோலத்தான் தெரியும்; ஆனால் கடைசியில் காதல் தீ பற்றி எரியும். எதிர்பாலரைப் பார்க்கும்போது, அவர்கள் மேல் சிறுபிள்ளையாயிருந்தபோதைக் காட்டிலும் வித்தியாசமான ஒர் அன்பு நிலை உருவாகும். விபச்சாரம் என்னும் திருணமணத்திற்கு முன்னான உடலுறவுக்குள் நாம் விழுந்துவிட வாய்ப்புகள் அநேகம். சுயபுணர்ச்சியிலிருந்து, ஆண்புணர்ச்சிக்கு முன்னேறி பின்னர் விபச்சாரம் என்ற விபத்தில் வாழ்க்கையை இழந்துவிட்ட வாலிபர்கள் அநேகர். சுயபுணர்ச்சியில் பிரம்மையை அனுபவித்து, ஆண்புணர்ச்சியில் பிரம்மையை அனுபவித்து உண்மையை அனுபவிக்கத் துடிக்கும் உடலுக்கு ஒத்துப்போகவேண்டாம். திருமணம் வரைக் காத்திருங்கள். விபச்சாரத்தினை தொழிலாகப் பார்க்கிறது இன்றைய உலகம். 'Sex workers' என அவர்களை கௌரவமாக அழைக்கிறது. எதிர்பாலருடன் அதிகம் பேசப் பிடிக்கிறது என்றாயானால் கவனம்; அதில் ஏதோ ஈர்ப்பு இருக்கிறது. வயது பெரியவர்கள் ஆனாலும், மிகவும் சிறியவர்கள் ஆனாலும் கவனம் தேவை. பெரிய வைக்கோல் போரையும் சிறிய தீக்குச்சி கொளுத்த முடியுமே. எனவே வயதை வைத்துக்கொண்டு பாதுகாப்பு என நினைத்து பாதிக்கப்பட்டுவிடாதீர்கள். திருமணத்திற்கு முன்னரே உணர்ச்சிகளை புணர்ச்சிகளாக்கி கல்யாணத்திற்கு முன்னே காலியாகிவிடாதீர்கள்.

ஆண் பெண் உடலுறவினை வீதிக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைய உலகு. உலலுறவுக் காட்சிகளை உள்ளடக்கிய பல இணையதளங்கள் பல புகுந்துவிட்டன. மற்றவர்களின் உடலுறவினை பார்த்து மகிழும் பாவத்திற்குள் இத்தகைய இணையதளங்கள் பல வாலிபர்களை ஈர்த்துவிட்டன. திரைப்படங்களே இதன் ஆதம்ப விதைகள். ஆடைகளைக் குறைத்து உணர்வுகளைத் தூண்டிவிடும் இன்றைய சினிமாக்களும், இத்தகைய இணையதளங்களுக்கு ஒத்தவைகளே. கன்னியை கவர்ச்சியாக்கி காமத்தைக் கிளரச் செய்யும் திரைப்படங்கள் உடலுறவினைத் தூண்டும் உணர்வுகளுக்கு இறைபோடுபவைகள். வாலிப சகோதரிகளே, சகோதரிகளே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை. இணையதளத்தினை பயன்படுத்துவது இன்றைய நாட்களில் அத்தியாவசியமாகிப்போன ஒன்று. செய்திகளை அறியவும், செய்திகளை அனுப்பவும் பல நற்காரியங்களைத் தெரிந்துகொள்ளவும் பல்வேறு வலைத்தளங்கள் இருந்தபோதிலும், காமத்தண்டை கால்களைக் கட்டிப்போடும் வலைத்தளங்களும் பெருகிவிட்டன. நாமாக நம்மை கட்டுப்படுத்திக்கொள்ளாத பட்சத்தில் இத்தகையவைகளினின்று தப்புவது அரிதானது. வாலிப நாட்களில், pornography வலைத்தளங்களுக்கு அடிமைப்பட்டு அதிலிருந்து விடுதலை பெற வழி அறியாது சிக்கிக் கிடப்போர் ஏராளம்;. நிர்வாணமான படங்கள் விபச்சாரத்திற்குற்ளேயே வழிநடத்துகின்றன. பத்சேபாள் குளித்துக்கொண்டிருப்பதை தாவீது பார்த்தபோது, அவருடன் விபச்சாரம் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உண்டானது (2சாமு 11:2). இப்படி அடுத்தவர் குளிப்பதையும், உடலுறவு கொள்வதையும் பார்க்கவேண்டாம்.

என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1) என்று யோபு சொன்னானே. ஒரு கன்னிகையின் மேல் நோக்கமாயிருக்கக்கூடாது என்றால், கட்டில் உறவினை நோக்கிப் பார்ப்பது சரியாகுமோ? இத்தகைய பாவத்தில் விழுந்தவர்கள், தங்கள் உடலுறவினைக் காட்டிலும் மற்றவர்களின் உடலுறவினைப் பார்ப்பதற்கு துடித்துக்கொண்டிருப்பார்கள். இத்தகையவர்கள், பொது இடங்களில், கழிப்பிடங்களில், துணிக்கடைகளின் வசயைட சழழஅ களில் என பல்வேறு இடங்களில் மறைவான வீடியோ கேமராக்களை வைத்து மற்றவர்களின் நிர்வாணத்தைக் காண அலைவார்கள். உடலுறவு காட்சிகளை இணையதளங்களில் பார்ப்பதுடன், தங்களது உடலுறவு காட்சிகளையும் இணையதளத்தில் அம்பலப்படுத்தும் அறிவீன மடமையான காரியத்திற்குள்ளும் சத்துரு அவர்களைத் தள்ளிவிடுகின்றான்.

கோவாவில் நடைபெற்ற ஓர் தம்பதியரின் தற்கொலைக்கு இதுவே காரணம். தம்பதியர் தங்கள் உடலுறவுக் காட்சிகளை வீடியோ கேமராவில் பதிவு செய்திருந்தனர். ஒரு சில வேலைக்காக வீடியோ கேமராவை கடை ஒன்றில் அவர்கள் கொடுத்திருந்தபோது, அந்த வீடியோ திருடப்பட்டது; அத்துடன் இணைதளத்திலும் வெளியிடப்பட்டது. தற்செயலாக இதனைக் கண்ட ஒருவர் அவரிடம் விசாரிக்க அத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டனர்.

திருணம் ஆனவர்களே உங்களுக்கும் ஓர் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! கட்டிய மனைவியை முத்தமிட, கட்டித் தழுவ, தொட்டுப் பழக முடியாதபடி முட்டுக்கட்டைகளாய் முளைத்த பல பிரச்சனைகளை இடையில் வைத்துக்கொண்டு உடலுறவு கொள்ள விருப்பமின்றி சத்துரு பல தம்பதியர்களை வாழவைத்துவிடுகின்றான். ஓர் வாராந்திர தமிழ் பத்திரிக்கையில் 'ஜிக்கோலாக்கள்' (விபச்சாரன்கள்) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. பெரிய பெரிய குடும்பங்களில் மனைவியோடு நேரம் செலவழிக்கக் (உடலுறவு கொள்ள) கூட நேரமில்லாமல், வேலையிலேயே இருக்கும் கணவன்களால் விரக்தியடைந்த பெண்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களது வீட்டிற்கு அவர்கள் கேட்டுக்கொண்ட நேரத்தில் 'ஜிக்கோலாக்கள்' (விபச்சாரன்கள்) அனுப்பிவைக்கப்படுவார்கள். இதற்காக நல்ல உடல்வாகு கொண்ட பல வாலிபர்களைக் கொண்ட குழு இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியே அது. 

உடலுறவினை கையில் எடுத்துக்கொண்டு உலகத்தையே சத்துரு உலுக்கிக்கொண்டிருப்பதும், உருக்குலைத்துக்கொண்டிருப்பதும் நடந்துவரும் இந்நாட்களில் கர்த்தருக்கென்று நம்மைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ளுவோம்.


புனிதமாகும் உணர்ச்சி



ஒரு கடைக்குச் சென்று கடைக்காரருக்குத் தெரியாமல் எதையாவது எடுத்து வந்தால் அது திருட்டு; ஆனால், காசு கொடுத்து (வரதட்சனையைக் குறிப்பிடவில்லை, உரிமையாக்கிக்கொள்வைதைச் சொல்லுகிறேன்) அந்தப் பொருளை வாங்கி வந்தால் அது உங்களுடையதாகிவிடும். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (எபி 13:4) என்பது வேதத்தின் எச்சரிக்கை. அப்படியே இயேசு, அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் (மத் 19:6) என்று கணவன் மனைவியைப் பற்றிக் கூறுகின்றார்.

திருமணத்திற்கு அப்புறமாக கணவன் மனைவி கொள்ளும் உடலுறவு புனிதமானது. அதனால் உண்டாகும், கருவினை, பிறக்கும் குழந்தையினை 'கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம்' என்று வேதம் வர்ணிக்கிறது. கணவன் மனைவி உடலுறவு தேவனால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று; எனினும் இவ்விஷயத்தில் சத்துருவும் தனது வலையினை விரிக்கின்றான். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை ஊக்குவித்து பாவம் செய்யத் தூண்டிவிடும் சத்துரு, திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியாக இணைந்தவர்களை உடலுறவு கொள்ளாதபடியும் தூண்டிவிடுகின்றான். திருமணத்திற்குப் பின் ஒருமனமில்லாதபடி இவ்விஷயத்தில் அவர்களின் உறவை உடைத்துவிடுகின்றான். ஓருடலாய் இணைக்கப்பட்டவர்களை ஈருடலாய் வாழவைத்துவிடுகிறான் சத்துரு. Abstaining from sex is permissible for a period of time if you both agree to it, and if it's for the purposes of prayer and fasting (1cor 7:5 - MSG Translation).

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது (1கொரி 7:10,11). If she depart, let her remain unmarried (1cor 7:11 - KJV Translation). தேவனால் இணைக்கப்பட்டவர்கள் விபச்சாரத்தையன்றி வேறெந்த காரியத்திற்காகவும் பிரிந்து விவாகம் செய்துகொள்ளக்கூடாது. பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டாலும், பிரிந்துபோன பின்னர் விவாகம் செய்யக்கூடாது. ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாள் ஆகியோரை விலக்கப்பட்ட மரத்தின் கனியினைப் புசிக்கும்படி வஞ்சித்து, அவர்கள் நிர்வாணிகள் எனக் காட்டிக்கொடுத்த சாத்தான், உடலுறவினை வெறுத்து உடைகளோடு உறங்கும்படி இன்று தம்பதியர் பலரை வஞ்சித்துவிடுகிறான். ஏதோ மனதில் உண்டான கசப்பு, வெறுப்பு, குடும்பத்தில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகள், இவைகள் பெரிதாகும்போது உடலுறவிலும் விரிசல் உண்டாகிவிடும்.

நேசிக்கத்தக்க மனைவியை நேசிக்க இயலாதபடி, மனைவியை மனையோடு (வீட்டோடு) ஏதோ உதவி செய்யும் வேலைக்காரிகளாக மட்டும் வைத்துப் பார்த்துவிடக்கூடாது. கணவனுக்கு முன் கவர்ச்சி தவறல்ல; ஆனால், பொது இடங்களில் அவைகள் தடை செய்யப்படத்தானே வேண்டும். பொது இடங்களில் முத்தம் கொடுப்பது தவறு என்பதால், வீட்டில் கணவன் மனைவியும் முத்தங்களைப் பரிமாரிக்கொள்வது தவறாகிவிடுமா? கணவனின் உணர்வினை மனைவியும், மனைவியின் உணர்வினை கணவனும் புரிந்துகொள்ளுதல் அவசியம். கணவன், ஏதோ தனக்கு விருப்பப்படும்போது மாத்திரம் மனைவியை உடலுறவுக்கென்று உபயோகித்து, மனைவியின் உணர்வினை எடைபோடத்தெரியாதவனாகவோ, தெரிந்தும் மதிக்கத் தெரியாதவனாகவோ இருந்தால் அதுவே மனைவிக்கு கணவன் கொடுக்கும் கொடும் தண்டனை. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி 2:25), அதுபோல, தேவனால் உருவாக்கப்பட்ட குடும்பத்தில் கணவன் மனைவி வெட்கத்தைக் களைந்தெறிவது வெற்றி தரும்.

'முதலிரவு' என்ற வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி உச்சரிக்கிறது உலகம். ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையினைத் தொடங்குகிற முதல் இரவு அது. முதலிரவினை உடலுறவாகத்தான் கருதுகிறது. திருமணம் ஆன அன்று முதல் இரவில் உடல் உறவு கொள்வது தவறல்ல என்றாலும், முதலிரவு என்ற உடலுறவின் நேரத்தை கொச்சைப்படுத்துவது தவறானது. முதலிரவு என்றாலே உடலுறவு என்றே சிந்திக்கும் நிலைக்கு உலகம் வந்துவிட்டது.

திருமணமான பின்னர் ஒரு சில ஆண்டுகள் மனைவியை அல்லது கணவனை அனுபவித்துவிட்டு, பின்னர் மற்றொருத்தியை அல்லது மற்றொருத்தனை சுவைக்கவேண்டும் என்ற விருப்பத்திற்குத் தங்களை விலக்கிக்கொள்ளாமல், மற்றொருத்தியுடன் விபச்சாரம் செய்து, விவாகம் செய்த மனைவியுடன் குடும்பம் நடத்துவோர் உண்டு. அப்படியே, வேதத்திற்கு ஒவ்வாத வேறு பல காரணங்களுக்காக விவாகரத்து செய்துகொண்டவர்களும் உண்டு. தேவனால் இணைக்கப்பட்ட இல்லறங்களை, பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து என்ற பெயரில் நீதிமன்றங்கள் திருட்டுத்தனமாகத் திறந்துவிடுகின்றன. 'விவாகரத்து' என்பது சத்துரு கிறிஸ்தவர்களுக்குள்ளே ஊற்றுகின்ற விஷம், இது உலகத்திற்க ஒத்த வேஷம்.

இயேசு சொன்னார்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் (மத் 5:32). விவாகம் செய்த மனைவி கணவனை விட்டுவிட்டு வேறொரு ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால், அவளை விவாகரத்து செய்யலாம். ஆனால், விபச்சாரப் பாவம் செய்தால் ஒழிய வேறு எந்த காரியத்திற்காகவும் விவாகரத்து செய்ய வேதம் இடமளிக்கவில்லை.

பரிசேயர் இயேசுவை சோதிக்கும்படியாக, புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா? (மத் 19:3) என்று கேள்வி எழுப்பியபோது, 'அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' (மத் 19:4-6) என்றார் இயேசு. அப்படியே பவுலும், 'விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது' (1கொரி 7:10) என்று தனது நிருபத்தில் எழுதுகின்றார்.

விபச்சார பாவமன்றி மற்ற காரணங்களுக்காக 'விவாகரத்திற்கு வேதம் இடம் கொடுக்கவில்லை'. மனக் கசப்பின் நிமித்தம் பிரிந்து வாழும் நிலை உருவானாலும், வேறொருவரை மணமுடித்து வாழ முடியாது. இது வேதம் அனுமதிக்காதது. அப்படியே பவுலும், 'பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள்' (1கொரி 7:11) என்றே அறிவுரை சொல்லுகின்றார். புருஷனை இழந்த (இறந்த) கைம்பெண்களுக்கு, 'விவாகமில்லாதிருப்பது நலம்' என்ற ஆலோசனையை பவுல் கொடுப்பதுடன், விரும்பினால் வேறொருவரை விவாகம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறுகின்றார்; ஆனால், புருஷனோ, மனைவியோ உயிருடன் இருக்கும்போது, விவாகரத்து செய்து, வேறோருவருடன் விவாகம் என்பதற்கு வேதத்தில் இடமில்லை. இப்படி வேதத்தின் சத்தியங்களுக்கு மீறிச் செல்வோரின் உணர்ச்சிகள், 'விபச்சாரம்' என்று புணர்ச்சியாகவே தேவனால் எண்ணப்படும். எனவே, விவாகரத்து என்ற வார்த்தையினால் வஞ்சிக்கப்படாதிருப்போம்.